மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 பேர் என மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 700 காளைகள்பங்கேற்கின்றன.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.
கடந்த ஜனவரி 14-ஆம் நாள் அவனியாபுரத்திலும், 15-ஆம் நாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 16-ஆம் நாள் நடைபெற வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் தேர்வாகும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவர்.
மேலும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படவுள்ளது. சிறந்த மாடு பிடி வீரருக்கும், சிறந்த காளை உரிமையாளருக்கும் கார் வழங்கப்படவுள்ளது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.