கடந்த 2021 ஜனவரி 06ஆம் தேதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஜோ பைடன் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற முடிவுகளை உறுதி செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்ட நடைமுறைகளை இடைமறித்தனர்.
கலவர சூழலில், அவையில் இருந்த அமெரிக்க அரசியல் தலைவர்கள் பயந்து நடுங்கிய காட்சிகள், உலகம் முழுக்க ஒளிபரப்பாயின.
இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்நிகழ்வு நடந்து முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அது குறித்து பேசிய ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
''தனது ஆதரவாளர்களிடம் காங்கிரஸை நோக்கி அமைதியாக பேரணியை நடத்தச் சொன்ன டிரம்ப், போராடவும் ஊக்குவித்தார். தான் தோற்ற தேர்தலில் பெரிய அளவில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமின்றி கூறினார்'' என ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "தேர்தலைக் குறித்து பைடன் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேப்பிட்டல் கட்டட முதலாமாண்டு நிறைவைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளனர்.