You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ராஜேந்திர பாலாஜிக்கு உதவிய கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படும்: அண்ணாமலை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    பிபிசிநேயர்களுக்கு வணக்கம்,

    பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    மீண்டும் நாளை (ஜனவரி 8) சந்திப்போம்.

    உலக மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

  2. சீன நிறுவனத்திற்கு 498 கோடி செலுத்தி 'விஷ உரம்' சர்ச்சையை முடித்துக் கொண்ட இலங்கை

    இலங்கையில் உள்ள அரச வங்கியொன்று, சீன நிறுவனத்துடன் நீடித்து வந்த சர்ச்சையைத் தீர்ப்பதற்காக வெள்ளிக்கிழமை 498 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளது.

    சீன நிறுவனமான குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம், இலங்கைக்கு கரிம உரத்தை அனுப்பியிருந்தது, ஆனால், அதில் குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

    செய்தி நிறுவனமான பிடிஐ தகவலின்படி, கொழும்பின் வர்த்தக உயர் நீதிமன்றம் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம் பணம் செலுத்துவதற்கான தடையை நீக்கியதை அடுத்து இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த விவகாரத்தில் சீன நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

    முன்னதாக, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் இந்த கொடுப்பனவை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தது. இந்த உத்தரவின் காரணமாக, சீன நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்த முடியாது என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

    சீனாவின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் நச்சு உரம் ஏற்றுமதியை ஏற்க மறுத்துள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு நவம்பரில், பணம் செலுத்தாததால், சீன தூதரகத்தால், இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

  3. ராஜேந்திர பாலாஜிக்கு உதவிய பா.ஜ.க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படும் - அண்ணாமலை

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்தனர்.

    சந்திப்புக்கு பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேவை என்பது எங்களது நிலைப்பாடு. நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வின் சாதகங்கள் எடுத்துரைக்கப்படும். வானதி சீனிவாசன் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்," என்று தெரிவித்தார்.

    "நீட் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் குறித்து மூத்த அரசியல் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது. பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு அம்மாநில அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்." என்றார்.

    மோசடி குற்றச்சாட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பா.ஜ.க நிர்வாகிகள் உதவியது குறித்து கேட்டதற்கு, "இது குறித்து அந்த நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படும்." என்று பதிலளித்தார்.

  4. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு: திமுக, தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

    முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, திமுக மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை ‘’சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன்.

    கடந்த பல ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள். மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுதொடர்பாகத் தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கு அரசியல்சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது.

    வரும் மார்ச் மாதம் நடைபெறும் விரிவான விசாரணையின்போது, 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை தி.மு.க முன்வைக்கும்.’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  5. இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் யாழ்ப்பாணம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை கடந்து இலங்கை பகுதிக்குள் அத்துமீறி வருவதைக் கண்டித்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக அங்குள்ள மீனவர்கள் சாலை மறித்து போராட்டம் நடத்தினர்.

  6. இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சிறிசேன கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 7) நிராகரித்துள்ளது.

    மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த கோரிக்கை மனு முன்வைக்கப்பட்டுள்ளது.தன்மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைகளின்றி, தள்ளுபடி செய்யுமாறு, மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வழக்கானது, சிவில் வழக்கு சரத்துக்களுக்கு அமைய தொடரப்படவில்லை என்பதனால், முன்னாள் ஜனாதிபதியை இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு மனுவின் ஊடாக, மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி கோரினார். எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதாக முன்னரே, தாக்குல் தொடர்பிலான தகவல் கிடைத்துள்ளதாக நியாயமான தகவல்கள் வெளியாகியுள்ளமையினால், முன்னாள் ஜனாதிபதியினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா கோரியுள்ளார்.விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது.

  7. தமிழ்நாட்டில் நீட் நீக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு: சீமான் அறிவிப்பு

    நீட் தேர்வினை நீக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து கூறுகையில், , ''கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவை சிதைத்தழிக்கும் ‘நீட்' தேர்வை திரும்பப் பெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    கொடிய 'நீட்' தேர்வை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான நன்முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாக துணை நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  8. கோவை வனப்பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலீசார் விசாரணை

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கூமாட்டி மலை கிராமத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி 11 வயது பழங்குடியின சிறுமி, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வால்பாறை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் நிகழ்ந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் தகவல் வெளியில் தெரிய, காலதாமதமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  9. நீர் மேலாண்மையில் தமிழ்நாட்டுக்கு 3வது இடம்: இந்திய நீர் வளத்துறை அமைச்சர்

    நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உட்பட தமிழகத்திற்கு 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்திய அளவில் நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று அறிவித்தார்.

    இதன்படி, நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் பிரிவில் உத்தர பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

    மேலும், பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.

    இதன்படி, கன்னியாகுமரி விவேகானந்தா மையம் சிறந்த அரசு சாரா நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வாகியுள்ளது.

    சிறந்த கிராம ஊராட்சியாக செங்கல்பட்டு வெள்ளப்புதூர் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  10. கூட்டுறவு மோசடிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை

    நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன? அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது. மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளீகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

  11. எல்லையில் நடப்பது தேச பாதுகாப்பில் பின்னடைவு - ராகுல் காந்தி ட்வீட்

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது எல்லையில் நடந்து வரும் நிகழ்வுகள் தேச பாதுகாப்பில் பெரும் பின்னடைவாகும். பிரதமர் இது குறித்து பேசுவாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. எல்லைப் பகுதியில் சீனா பாலங்கள் அமைத்து வருகிறது. ராணுவத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது என்கிற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. அதை சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி இந்த இடுகையை பதிவிட்டுள்ளார்.

  12. கொரோனா 4வது தவணை தடுப்பூசி போட தயாராகும் சிலி நாடு

    கொரோனா திரிபான ஒமிக்ரான் உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், லத்தின் அமெரிக்க நாடான சிலி, உலகிலேயே முதல் முறையாக கோவிட் 19 தடுப்பூசியின் 4வது டோஸை அதன் மக்களுக்கு போடும் முதல் நாடாக திகழவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

  13. அண்ணா பல்கலை: மேலும் 60 பேருக்கு கொரோனா- விடுதியை காலி செய்யும் மாணவர்கள்

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி மாணவர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருமல், சளி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, மற்ற மாணவர்களுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில், மேலும் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்கள், விடுதி பணியாளர்கள், சமையலர்கள் எனப் பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபப்படுகிறது.

    கொரோனா தொற்று பாதித்த மாணவர்களைத் தவிர மற்றவர்களை சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு எம்.ஐ.டி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

  14. கூட்டுறவு சங்கங்களில் பெரும் மோசடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக் காலத்தை குறைக்கும் வகையில் கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடனில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. போலி நகைகளை அடகு வைத்தும் நகைகளை அடகு வைக்காமலும் மோசடி நடைபெற்றுள்ளது.

    இதற்கு காரணமான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தாமல் அதிமுகவினரே பதவி நீட்டிப்பு மற்றும் நியமனம் செய்யப்பட்டனர்."என்று தெரிவித்தார்.

  15. மதுரையில் பிரதமருக்காக பா.ஜ.கவினர் யாகம்

    இந்திய பிரதமர் மோதி நீண்ட காலம் வாழ வேண்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.கவினர் யாகம் நடத்தினர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில், பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இது பாதுகாப்பு குறைபாடு என்று பா.ஜ.க குற்றம்சாட்டப்பட்டிள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி நீண்ட ஆயுளுடன் வாழ மதுரை மாவட்ட பாஜக சார்பில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், மகாமிருத்யுஞ்ஜய யாகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

    தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

  16. பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறை - ஆவணங்களைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறை குறித்த ஆவணங்களைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    பிரதமர் பயண பாதுகாப்பு குறை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தேசிய புலனாய்வு முகமை உரிய தொழில்நுட்ப ரீதியிலாக உதவ வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் பதிவாளருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும் இந்த விவகாரத்தில், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், பஞ்சாப் டிஜிபி ஆகியோர் பொறுப்பு (நோடல்) அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் அனுமதி

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீதம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீடு குறித்த முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    இதில், நடப்பாண்டு முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையை நடத்தலாம். அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % ஒதுக்கீட்டுடன் சேர்க்கை நடத்தலாம். இதேபோல், நடப்பாண்டு மட்டும் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% ஒதுக்கீட்டுடன் சேர்க்கை நடைபெறும். இது குறித்து மார்ச் மாதம் மீண்டும் விசாரணை நடத்துவது என்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கினால் நீட் முதுநிலை மருத்துவப் பட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உடனே சேர்க்கை நடத்த கோரி மருத்துவர்கள் கடந்த வாரம் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்திய மருத்துவர்களோடு சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் "உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் சேர்க்கை நடைபெறும்" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

  18. ஒமிக்ரான் லேசானதல்ல: மக்களை கொல்கிறது - உலக சுகாதார அமைப்பு

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 71% அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்காவில் 100% அதிகரித்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    உலகம் முழுக்க கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    . ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

  19. ஒமிக்ரான்: இந்தியாவில் மொத்தம் 3,007 பேருக்கு தொற்று

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகராஷ்டிராவில் 876, டெல்லியில் 465, கர்நாடகத்தில் 333 பேருக்கு தொற்று உறுதி.

    தமிழ்நாட்டில் மொத்தம் 121 தொற்று உறுதியாகியுள்ளது. அனைவரும் சிகிச்சை முடிந்து, நலமுடன் உள்ளனர். நாடு முழுவதும் தொற்று உறுதியான 3, 007 பேரில் 1, 199 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

  20. இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

    செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுண்டரில் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு கடைவீதியில் நேற்று டீ குடித்துக் கொண்டிருந்த கார்த்தி, வீட்டில் இருந்த மகேஷ் ஆகிய இருவரும் சிலரால் அடுத்தடுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் ரவுடிகள் தினேஷ், மொய்தீன் உள்ளிட்டோர் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் இருவரையும் செங்கல்பட்டில் இன்று காலை, சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர்.

    அப்போது, நடைபெற்ற மோதலில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், இருவரும் இறந்தனர். இருவர் மீதும் ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், ''இருவரையும் பிடிக்க முயற்சித்த போது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் தற்காப்பிற்காக சுடும் நிலை ஏற்பட்டது. ரவுடிகள் தாக்கியதில், காவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்'' என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோரை கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎஸ்பி வெள்ளதுரை உள்ளிட்டோர் கொண்டசிறப்பு படை அண்மையில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.