You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி: சர்ச்சையில் பஞ்சாப் முதல்வர்

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு விஷயத்தில் எது தவறாக நடந்திருந்தாலும் அது ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியாக செயல்படவில்லை எனற சர்ச்சை தீவிரமாகி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜனவரி 5ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிக செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழக எம்.பிக்களை அமித் ஷா சந்திக்காதது ஜனநாயக விரோதம் - காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

    நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாட்டு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை இந்திய உள்துறை அமைச்சர் சந்திக்காதது அப்பட்டமான ஜனநாயக விரோதம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட முக்கியமான பிரச்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அமித்ஷா மறுத்ததும், தமிழக ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகவே கருத வேண்டியிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

  3. ஒமிக்ரான் பரவல்: வீட்டுத்தனிமைக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

    ஒமிக்ரான் பரவல் காரணமாக வீட்டுத் தனிமையில் இருப்பது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

    இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள், இணை நோய் இல்லாதவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானால், அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

    வீடுகளில் போதிய இட வசதி, காற்றோட்டம் இருத்தல் அவசியம்.

    கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேலானவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்

    வைரஸ் தொற்று உறுதியானதில் இருந்து 5 நாட்களுக்கு பின், காய்ச்சலோ அறிகுறியோ இல்லாமல் இருப்பின், அவர்கள் தொடர்ந்து வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  4. கஜகஸ்தானில் 2 வார அவசர நிலை - எரிபொருள் விலை ஏற்றத்தால் வன்முறை

    கஜகஸ்தான் நாட்டில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய நகரமான அல்மாட்டியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராடத்தின் போது வன்முறை ஏற்பட்டது.

    இதையடுத்து 2 வார கால அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்கு, மக்கள் நடமாட கட்டுப்பாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்டவை நடைமுறைக்கு வந்துள்ளன.

  5. சென்னை விமான நிலையத்தில் பயணி உடைமையில் 1, 364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

    மலேசியாவிற்கு கடத்தவிருந்த 1, 364 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினர் மீட்டனர்.

    சென்னையில் இருந்து மலேசியா செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட இருந்த 1,364 இந்திய நட்சத்திர ஆமைகளைக் சுங்கத்துறையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நட்சத்திர ஆமைகள் மாநில வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது

  6. பஞ்சாபில் பிரதமர் பயண திட்டத்தில் சதி - மத்திய அமைச்சர் ஷெகாவத் குற்றச்சாட்டு

    பஞ்சாபில் பிரதமரின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஒரு சதி என்று மத்திய அமைச்சரும் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

    "இது ஒரு சதி. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். சில ஜூனியர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது." என்று அவர் கூறியுள்ளார்.

  7. பிரதமரின் பாதுகாப்பு: போனை எடுக்காத சர்ச்சையில் முதல்வர் சரண்ஜித் சன்னி

    பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க முடியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பான முழு விவரத்தை விளக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இனறு மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பிரதமரின் வருகையின்போது அதற்கு எதிராக சிலர் சாலை மறியல் செய்ததால் பிரதமர் திரும்பியதற்காக வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.

    திடீரென சிலர் அங்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.இதில் சதி இருந்தால் முழு விசாரணை நடத்தப்படும். பஞ்சாப் மண்ணில் பிரதமரை வரவேற்கிறோம். பிரதமர் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இதில் பஞ்சாப் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, வழியில் ஒருவர் வந்து அமர்ந்தபோது, மற்றவர்களும் ​​திடீரென வந்து அமர்ந்து விட்டனர். அதை பாதுகாப்பு அச்சுறுத்தலோடு இணைப்பது அரசியலாக இருக்கலாம். என்று சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

    விவசாயிகளால் டெல்லியில் ஓராண்டு போராட்டத்தில் இருக்க முடியும் என்றால், அங்கு அவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? எதிர்ப்பாளர்கள் செல்லும் வழியில் அமர்ந்திருப்பதாக பாதுகாப்புப்படையினரிடம் கூறியதாகவும், பிரதமரேதான் திரும்பிச் செல்ல முடிவு செய்ததாகவும் சன்னி கூறினார்.

    "இதில் பாதுகாப்பு பிரச்னை இல்லை. இனி வரும் காலங்களில் நல்ல ஏற்பாடு செய்வேன் . பிரதமர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்," என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தமது செல்பேசியை எடுக்கவில்லை என பாஜக தலைவர் நட்டா குற்றம்சட்டியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் நேரடியாக எந்த பதிலையும் வழங்கவில்லை.

  8. பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி: பஞ்சாபில் ஆளும் அரசை விமர்சிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்

    பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவரான சுனில் ஜாக்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோதி இன்று பேரணியில் கலந்து கொள்ளச் சென்றபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பேரணியில் பங்கேற்காமல் திரும்பினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.

    ஆனால் சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் தங்கள் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.

    பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் ட்விட்டரில், "இன்று நடந்ததை ஏற்க முடியாது. அது பஞ்சாபியத்துக்கு எதிரானது. இந்திய பிரதமர் ஃபெரோஸ்பூரில் அரசியல் பேரணியில் உரையாற்றவிருந்தார், அதற்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்திருக்க வேண்டும். இப்படி செய்வதுதான் ஜனநாயகம் என்று கூறியுள்ளார்.

    சுனில் ஜாக்கரின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கையிலிருந்து வேறுபடுகிறது.

    ஃபெரோஸ்பூரில் நடைபெற்ற பேரணியில் கூட்டம் இல்லாத காரணத்தால் பிரதமர் உரையாற்ற செல்லவில்லை என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகக் கோரும் டி.ஆர். பாலு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வரும் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவதற்காக கடந்த வாரமும் இந்த வாரமும் எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லியில் முகாமிட்டிருந்தது. இருப்பினும் அவர்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை.

    இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் சென்னை புறப்படும் முன்பு டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு இந்திய உள்துறை அமைச்சகத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை சட்டமாக்க கோரி மீண்டும் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் வேண்டுமென்றே மசோதாவை உள்துறைக்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தி வருகிறார் என்று கூறினார்.

    அரசியலமைப்பின்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, அதை குழி தோண்டி புதைத்துள்ளார். எனவே தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று அவர் கோரினார்.

    தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு டெல்லியில் உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க மூன்றாவது முறையாக முயற்சித்து. ஆனால், அரசியல் காரணங்களால் எங்களை சந்திக்கஅமித் ஷா மறுக்கிறார். இந்த செயல்பாடு கண்டிக்கத் தக்கது என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

    இந்த பேட்டியின் போது எம்.பிக்கள் அதிமுக நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், விசிக திருமாவளவன், ரவிக்குமர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் புதிய கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் - அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள், ஆ. விஜயானந்த்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    1) மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

    • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்

    • மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

    • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

    • உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    2) வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

    • பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

    • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

    • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

  11. தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு - மருத்துவத்துறை அமைச்சர்

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

    தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன' என்றார்.

  12. ஒ.என்.ஜி.சி லாரியை தடுத்து போராட்டம் - புதிய எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு, ஜி,மணிவண்ணன்

    மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சியின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக, குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தளவாட பொருட்களுடன் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி விவசாயிகள், ஜெயராமன் உள்ளிட்ட மீத்தேன் எதிர்ப்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு பணி என்ற பெயரில் புதிய கிணறு அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.

    போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  13. பிரதமரின் பஞ்சாப் பயண பாதுகாப்பு ஏற்பாட்டில் பாதுகாப்பு குளறுபடி - மீண்டும் விமான நிலையம் திரும்பிய மோதி

    பிரதமர் நரேந்திர மோதி இன்று பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியிருக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்.

    மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார்.

    ஆனால், வானிலை சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்படடது. பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தபோது, ​​​​சில எதிர்ப்பாளர்களால் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன.

    இது குறித்து இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி. பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து, உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. வெள்ள சேதங்களை சீரமைக்க நிதி - தமிழக ஆளுநர் உரையில் வலியுறுத்தல், ஆர்.விஜயானந்த்

    தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சட்டமன்றக் கூட்ட தொடக்க உரையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்ட தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுகையில், ''வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னை உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டன. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில், துல்லியமான திட்டமிடல், திறன்மிகு மேலாண்மை, தீவிர மேற்பார்வையின் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

    இருப்பினும் சாலைகள், பாலங்கள், நீர்நிலைகள் போன்ற கட்டமைப்புகளும் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

    நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 6,230 கோடி ரூபாய் நிதி கேடடு விரிவான கோரிக்கையை அரசு அளித்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என்றார்.

  15. ஓமிக்ரான் பரவல்: ‘RRR’, ‘ராதே ஷ்யாம்’ உட்பட வெளியீடு தள்ளிப்போகும் பெரிய படங்கள்; ‘வலிமை’ நிலை என்ன?, ச. ஆனந்தப்பிரியா

    கொரோனா திரிபாக ஓமிக்ரான் அனைவரையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இதன் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாட்டையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த வருடமும் இதேபோன்று 50% பார்வையாளர்களுடன் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக வந்தது. இந்த வருடமும் புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ‘RRR’, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் வெளியாக திட்டமிட்டு அதற்கான வேலைகளும் நடந்தன.

    ஆனால், ஓமிக்ரான் பரவலை அடுத்து கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டது, 50% பார்வையாளர்கள் அனுமதி போன்ற காரணங்களால் இந்த மாதம் வெளியாக இருந்த ‘RRR’ பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும் இதே காரணத்தை முன்னிட்டு வெளியீடு தள்ளி போயுள்ளது.

    பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படத்தின் வெளியீடும் தற்போது உறுதிசெய்யப்படமால் இருக்கிறது.

    ஓமிக்ரான் பரவல் காரணமாக ‘வலிமை’ வெளியீடு தள்ளிப்போகலாம் எனவும் இல்லையென்றால் நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் படக்குழு இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

  16. எம்.ஐ.டி: 46 மாணவர்களுக்கு கொரோனா, ஆ. விஜயானந்த்

    சென்னை, குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி மாணவர் விடுதியில் 1200 பேர் உள்ளனர். இருமல், சளி என உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள, மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டடது. இதில் மாணவர்கள் 46 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய எம்.ஐ.டி வளாக பேராசிரியர் ஒருவர், `` கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றுக்காக சில மாணவர்கள் கடைவீதிகளுக்கு சென்று வந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இருமல், சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். இவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்த வருவதால் தொற்று அதிகரித்திருக்கலாம்.' என்கிறார்.

    இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``ஒரு கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்'' எனப் பதில் அளித்தார்.

  17. ஜெயலலிதாவின் வேதா இல்ல வழக்கு - அ.தி.மு.கவின் மனு தள்ளுபடி, ஆ. விஜயானந்த்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், `தனி நீதிபதியின் கருத்து சரியானது' எனக் கூறி அ.தி.மு.கவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை போயஸ் கார்டனில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் உள்ளது. இந்த இல்லத்தைக் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுடைமையாக்கினார். இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர்சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதுதொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேஷசாயி, வேதா இல்லத்தை அரசுடையாக்கி அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது எனவும் தெரிவித்தார்.

    வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுவதாகவும் சேஷசாயி தீர்ப்பளித்தார். மேலும், மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் இருக்கும்போது, இன்னொரு நினைவிடம் எதற்கு என்ற கேள்வியையும்அவர் எழுப்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, வேதா இல்லத்தின் சாவிகள், தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ` வேதா இல்லத்தை வாரிசுகளிடம் ஒப்படைத்தால் அது கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கில் தற்போதுள்ளஅரசு மேல்முறையீடு செய்வதற்கு அக்கறை செலுத்தவில்லை. மேலும், நினைவு இல்லமாக மாற்றுவது என்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என தனி நீதிபதி தெரிவித்த கருத்தும் அவசியமற்றது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திக்குமார் சுகுமார குரூப் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். ` தனி நீதிபதியின் உத்தரவு சரியானது. அதனை கையகப்படுத்தியதில் விதிமீறல்கள் உள்ளது என நீதிபதி தெரிவித்த கருத்துசரியானது' எனக் கூறி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், `ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் தேவையில்லை என தனி நீதிபதி தெரிவித்த கருத்தும் சரியானதுதான்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

  18. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை தொடங்கியது, பிரபுராவ்ஆனந்தன்

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் , ஜனவரி 14ம் தேதி, 15ம் தேதி பாலமேட்டில், ஜனவரி 16ம்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் 3 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜல்லிக்கட்டு நடத்த அரசு விரிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    இதன்படி, கால்நடை மருத்துவர்களால் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கும் பணி மதுரை அவனியாபுரத்தில் விறு விறுப்பாக நடைபெற்றுவருகிறது.

    குறிப்பாக, நாட்டு இனகாளைகள், குறைந்தபட்சம் 120செ.மீ.உயரம், 3 வயதுக்கு மேற்பட்டகாளைகள் என தகுதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

  19. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து, வெளி நடப்பு செய்தனர். பின்னர், எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடடது. போதைப் பொருட்களைத் தடுக்க அரசு தவறிவிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஏழை, எளிய மக்களின் மீது அக்கறையில்லாத அரசாக உள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. காவல் துறை அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிமுகவினர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகளை கண்டிக்கிறோம். இவற்றையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.'' என்றார்.

    எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

  20. தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்

    தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பட்டியலை வெளியிட்டனர்.

    இதன்படி, தமிழ்நாட்டில் பெண்கள் 3, 23, 91, 250 பேர், ஆண்கள் 3, 12,26, 759 பேர், மூன்றாம் பாலினம் 7,804 என மொத்தம் 6, 36, 25, 513 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2.86 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலும் வாக்காளர்கள் உள்ளனர்.