யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இந்த போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.இந்திய இழுவைப் படகு மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் ஆரம்பமான போராட்ட பேரணி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், கைப்பற்றப்படும் படகுகளை விடுவிக்கக்கூடாது, தமது வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என்ற கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 68 மீனவர்களுடன், 10 படகுகளை இலங்கை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் கைது செய்திருந்தனர்.கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.இந்திய மீனவர்களின் அத்துமீறி பிரவேசம் காரணமாக, இலங்கையின் வடப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.அதனால், தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையில், இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டம் காரணமாக, யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியான ஏ-9 வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, மாவட்ட செயலக வளாகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூகமளித்துள்ளார்.இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து, தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்துவதாக, யாழ்ப்பாணம் மீனவர்களிடம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியை அடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.