மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தமிழக நலனுக்கு எதிராக மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காவிரி ஆணையத்தை மிரட்டும் உள்நோக்கத்தோடு, அரசியல் லாப நோக்கத்தோடு முடிந்துபோன காவிரி பிரச்னையை, காங்கிரஸ் கட்சி மீண்டும் துவக்குவது, தமிழக நலனுக்கு எதிரானது. இது தமிழக விவசாயிகளை மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவதாக அமைகிறது.
இதனை கண்டித்தும்,ராசிமணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை துவங்கவும் வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி பூம்புகாரில் துவங்கி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, மேட்டூர் பகுதிகள் வழியாக பேரணி நடத்தப்படும். ஜனவரி 18ஆம் தேதி ராசிமணல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
காவிரி மட்டுமன்றி முல்லைப் பெரியாறிலும் அரசியல் உள்நோக்கத்தோடு விஷம பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வரும் 28ஆம் தேதி மதுரையில் அனைத்து விவசாயிகள்,சமூக சேவை அமைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.