கூடங்குளத்தில் அணுஉலை விரிவாக்கம் மற்றும் அணுக் கழிவு மையத்தை தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான மேதா பட்கர்,சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுப.உதயகுமார்,பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைஇன்று சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில்,வேளாண் சட்டம்,குடியுரிமைச் சட்டம்,நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன்,அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகிய திட்டங்களில் தி.மு.க அரசு எடுத்த நிலைப்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து,கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம் மற்றும் அணுக்கழிவுமையம் ஆகியவற்றை தடுத்து நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மேதா பட்கர், ``மாநில அரசுக்கு எந்தத் திட்டத்தையும் நிறுத்தக்கூடிய அதிகாரம் உள்ளது. அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் விவகாரத்திலும் முடிவெடுக்க வேண்டும்.
விவசாய சட்டத்தை மத்திய அரசு இயற்றினாலும் அதற்கு எதிராக தி.மு.க அரசு,சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இது இந்திய அரசின் ஒப்பந்தம் எனக் கூற வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசு நினைத்தால் தடுக்கலாம்''என்றார்.
மேலும், ``வளங்கள் மீதான உரிமையை கார்ப்பரேட்டுகள் கொண்டாடுகின்றன. அணுசக்தியின் கதிர்வீச்சால் கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன. ஒரே இடத்தில் ஆறு உலைகளை அமைப்பது என்பது தவறான ஒன்றாகப் போய்விடும்''எனவும் மேதா பட்கர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து,மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு,அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,பூவுலகின் நண்பர்கள்,அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவை மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
அதில், `கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக மூன்றாண்டுகள் தொடர்ந்து மக்கள் போராடியதை புறம்தள்ளி இன்று கூடங்குளத்தில்3, 4, 5, 6,என மென்மேலும் அணுஉலைகளை மத்திய அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. அனைத்துமே1,000மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப் பெரியஅணுஉலைகள். இவற்றுள் முதல் இரண்டு உலைகளுமே இன்றுவரை திறம்பட இயங்கவில்லை. முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை.
பல்வேறு குளறுபடிகளாலும் தொழிற்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேலும்7, 8அணுஉலைகளும்,அணுக்கழிவு மையங்களும்,அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் (reprocessing plant)அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன'எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், `தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்புக் கூட்டத்தொடரில்,கூடங்குளம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த9ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங்,உண்மைக்குப் புறம்பானகருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் அமைக்கப்படும் அணுக்கழிவு மையங்கள் நிலநடுக்கங்களையும் சுனாமியையும்கூட எதிர்கொண்டு பாதுகாப்பாக இயங்க முடியும் என்றும் அணுக்கழிவு மையங்களால் அணுமின் நிலைய ஊழியர்கள்,பொதுமக்கள்,சுற்றுச்சூழல் என யாருக்கும் எந்தவிதக்கேடும் உருவாகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ‘பூவுலகின் நண்பர்கள்’2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்,அணுக்கழிவு மையங்கள் (Away From Reactors --அணுஉலைக்கு அகலே) அமைப்பதற்கான தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்று2018-ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக ஆவணம் ஒன்றைசமர்ப்பித்து,கூடுதல் கால அவகாசம் கோரியது. அந்தக் காலக்கெடு வரும்2022மே மாதம் முடிவடைகிறது. மத்திய அரசும்,அதன் அணுசக்தித் துறையும் இப்படி முற்றிலுமாக திரித்துப் பேசுவது ஓர் அறமற்ற,ஆபத்தான செயல்'எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், `கூடங்குளத்தில் இயங்காமல் உள்ள முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்ற ஊழல்கள்,முறைகேடுகள்,ஆபத்துகள் பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,ரஷ்யாவுடன் போடப்பட்ட1997ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேதிருப்பி அனுப்ப வேண்டும்'எனக் குறிப்பிட்டுள்ளனர்.
`இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கே கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து,அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே,கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும். அதுவரையில்,கூடங்குளத்தில்3, 4, 5, 6அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா,வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா,மத்தியப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தேவாரம் நியூட்ரினோ திட்டம் போன்றவற்றைக் கைவிட்டு,தமிழ்நாட்டை`அணு தீமையற்ற தமிழ்நாடு'என அறிவிக்க வேண்டும்'என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.