மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, திரைப்பட நடிகர் சாலமன் பாப்பையா, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவித்தார்.
இதையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், தொழில், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இதையடுத்து இன்று 2020ஆம் ஆண்டில் தேர்வானவர்களுக்கும் நாளை (நவம்பர் 12) 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன்படி இன்று பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வான ஏழு பேர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வான 10 பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வான 102 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
பத்ம விபூஷன் பெற்றவர்களில் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சிற்பக் கலைஞர் சுத்ராஷன் சாஹு, இதயநோய் நிபுணரும், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் பெல்லி மோனப்பா ஹெக்டே மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்குவர். எஸ்.பி.பிக்குரிய விருதை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பெற்றுக் கொண்டார்.
மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கான பத்ம விபூஷண் விருதை அவர்களின் உறவினர்கள் விருதினை பெற்றுக்கொண்டனர்.
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் (மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்), கன்னட இலக்கியவாதி சந்திரசேகர் கம்பாரா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, பாடகி கே.எஸ்.சித்ரா, சமூக சேவகி கிருஷ்ணம்மாள், முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிவிஎஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஜோஹோ கார்ப்பரேஷனின் CEO ஸ்ரீதர் வேம்பு, பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மாதா பி மஞ்சம்மா ஜோகதி ஆகியோர் அடங்குவர்.
பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரனாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் அடங்குவர்.
தமிழ் நடிகரும், தொலைக்காட்சி விவாத ஆளுமையுமான சாலமன் பாப்பையா, பார்வையற்ற மலையாள எழுத்தாளர் பாலன் பூத்தேரி, பாலினீஸ் நிகழ்ச்சிக் கலைஞர் ஐ வயன் துபியா, பயன்பாட்டுக் கணிதவியலாளர் ரங்கசாமி லக்மிநாராயணா ஆகியோரும் அடங்குவர். காஷ்யப் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.