தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்துக்கு காரணமாகும் அனல்மின் நிலையங்களை உருவாக்குவது ஏன்?
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெகுவாக எதிர்கொள்ள வேண்டிய மாநிலம். தமிழ்நாட்டிற்கு காலநிலை மாற்றம் தொடர்பாக என்ன கொள்கைகள், திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்து தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கே. உலகம் முழுவதுமே காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை எந்த அளவுக்கு தீவிரமானது என நினைக்கிறீர்கள்?
ப. காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கடந்த காலத்தில் சரியாகக் கையாளாதால், கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். இருந்தாலும் புதிய அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் துவங்கியிருக்கிறது.
காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம், புவிவெப்பமாதல். அதனை எதிர்கொள்ளும்விதமாக, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமைக் குழு மூலமும் வனத் துறை மூலமும் பெரிய அளவில் மரங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும் துவங்கப்பட்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் வரக்கூடிய பாதிப்புகள் எப்போதுமே ஏழை, எளிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆகவே, இந்த பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. வசிக்கத் தகுதியற்ற இடங்களில் இன்னமும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க 2.76 லட்ச ரூபாயில் வீடுகள் கட்டுத்தரப்பட்டு வருகின்றன.


