வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து 5 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த 26 ஆம் தேதி கவிதா என்ற பெண் சிங்கம், உடல்நலக் குறைவாலும் வயது மூப்பு காரணமாகவும் இறந்தது. இதன் தொடர்ச்சியாக, 5 நெருப்புக் கோழிகள் இறந்ததை பூங்கா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
இதுதொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்று. இங்கு 180 இனங்களில் 2,400க்கும் மேற்பட்ட விலங்குகளை விஞ்ஞான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பூங்காவில் 19 வயதான கவிதா என்ற பெண் சிங்கம் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 26 அன்று இறந்தது. இதையடுத்து, பூங்கா மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மருத்துவக் குழுவுடன் இணைந்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.மேலும், இந்தப் பூங்காவில் இயற்கை முறையில் நெருப்புக் கோழிகள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி உடல்நலக் குறைவால் 5 நெருப்புக் கோழிகள் திடீரென இறந்தன. இதுதொடர்பாக, நெருப்புக் கோழிகளுக்கு பூங்கா மருத்துவர்கள் நோய்த் தடுப்பு சிகிச்சையளிக்கும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மருத்துவர்கள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வைரஸ், பாக்டீரியா மற்றும் நச்சு இயல் ஆய்வுக்காக நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ரத்த மாதிரிகள் மற்றும் உடல் உறுப்புகள் ஆய்விலும், `நெருப்புக் கோழிகளுக்கு காலரா இல்லை' என்பது அறியப்பட்டது. மீதமுள்ள பறவைகளையும் அவற்றின் இருப்பிடத்தையும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று காரணமாக இரண்டு சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு பெண் சிங்கமும் 5 நெருப்புக் கோழிகளும் உயிரிழந்த சம்பவம், சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.