You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அமித் ஷா காஷ்மீர் பயணம்: பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் சந்திப்பு

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய பாதுகாப்பு படைகள், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இந்த இரவு உங்களுக்கு இனிதாகட்டும்.

  2. ஜம்மு & காஷ்மீரில் அமித் ஷா

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய பாதுகாப்பு படைகள், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் இன்று ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

    இன்று ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சேவையைத் தொடங்கி வைத்தார் அமித் ஷா.

    11 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

  3. இலங்கை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்ட இந்திய நீதிமன்றம், பிரபுராவ் ஆனந்தன்

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான இலங்கை மீனவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 21ந் தேதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட நிமலதாஸ், கஜிபம் ஆகிய இருவரும் இந்திய எல்லைக்குள் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் நேற்று மாலை கைது செய்து இரவு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களையிடம் தீவிர விசாரணை நடத்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின் மீனவர்கள் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் நள்ளிரவு ஒப்படைக்கப்பட்டு பின் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்

    தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு, திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  5. தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோதி

    இந்தியா 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்று இலக்கை அக்டோபர் 21 அன்று எட்டியுள்ள நிலையில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஏழு இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துள்ளார் என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டிஸ் லெபோட்டரீஸ், சைடஸ் காடில்லா, பயாலஜிக்கல் - இ, ஜென்னாவா பயோஃபார்மா , பனாசியா பயோடெக் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.

    இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கும், தகுதியுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  6. கூழாங்கல் - தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை

    இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த செய்தியை 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கூழாங்கல் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது தொடர்பாக ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    விருதுகளை குவித்த 'கூழாங்கல்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்தின், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, 'டைகர்' விருதையும் இது வென்றது.

    'டைகர்' விருதை வென்ற முதல் தமிழ்த்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூன் மாதம் உக்ரைன் தலைநரான கீவ் நகரில் நடைபெற்ற மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவிலும் ('Molodist Internatinational Film Festival') இந்த படம் திரையிட தேர்வாகி இருந்தது.

    இதற்கும் தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது.

    படம் குறித்தும், விருதுகள் குறித்தும் முன்பு பிபிசி தமிழிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்,

    , "கூழாங்கல்' படத்தின் கதை நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது," என்றார்.

    சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு எந்தப் படத்தை பரிந்துரைப்பது என்பதை தேர்வு செய்வதற்கான பட்டியலில்

    'சர்தார் உத்தாம்', 'ஷேர்னி', 'செல்லோ ஷோ', 'நயாட்டு', 'கூழாங்கல்', 'மண்டேலா' உள்ளிட்ட 14 படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் தமிழ்த் திரைப்படமான 'கூழாங்கல்' அதிகாரபூர்வமாக தற்போது தேர்வாகி உள்ளது.

    இதேபோல, கடந்த ஆண்டு இந்தியா சார்பில் மலையாள படமான 'ஜல்லிக்கட்டு' தேர்வானது குறிபிடத்தக்கது.

  7. டெல்டா பிளஸ் அதிவேகமாகப் பரவக்கூடியது - விஞ்ஞானிகள் கருத்து

    கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர்.

    யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது.

    இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை.

  8. தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்ததாக இருவர் கைது

    தங்கள் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்துவந்ததாக குற்றம்சாட்டி இரண்டு பேரை கைது செய்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகர போதைத் தடுப்பு போலீஸ் பிரிவு.

    அவர்களிடம் இருந்து 250 கஞ்சா செடிகளையும் போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

  9. 3 நாள் பயணமாக ஸ்ரீநகர் சென்றுள்ள அமித்ஷா

    இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் சென்றுள்ளார்.

    காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் அங்கு பரிசீலனை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. தமிழகத்தில் மூன்றாவது அலை இதுவரை வரவில்லை - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

    தமிழ்நாட்டில் இன்று ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

    மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் அப்போது கேட்டுக் கொண்டார்.

    அப்போது மூன்றாம் அலை குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது, இதுவரை மூன்றாம் அலை வரவில்லை, ஆனால் வராது என உறுதியாகக் கூற முடியாது என பதிலளித்தார் ராதாகிருஷ்ணன்.

    மேலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 22ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 13,531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 22ம் தேதி ஒரு நாளில் 1,152 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  11. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.