இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கூழாங்கல் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது தொடர்பாக ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுகளை குவித்த 'கூழாங்கல்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்தின், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, 'டைகர்' விருதையும் இது வென்றது.
'டைகர்' விருதை வென்ற முதல் தமிழ்த்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூன் மாதம் உக்ரைன் தலைநரான கீவ் நகரில் நடைபெற்ற மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவிலும் ('Molodist Internatinational Film Festival') இந்த படம் திரையிட தேர்வாகி இருந்தது.
இதற்கும் தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது.
படம் குறித்தும், விருதுகள் குறித்தும் முன்பு பிபிசி தமிழிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்,
, "கூழாங்கல்' படத்தின் கதை நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது," என்றார்.
சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு எந்தப் படத்தை பரிந்துரைப்பது என்பதை தேர்வு செய்வதற்கான பட்டியலில்
'சர்தார் உத்தாம்', 'ஷேர்னி', 'செல்லோ ஷோ', 'நயாட்டு', 'கூழாங்கல்', 'மண்டேலா' உள்ளிட்ட 14 படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதில் தமிழ்த் திரைப்படமான 'கூழாங்கல்' அதிகாரபூர்வமாக தற்போது தேர்வாகி உள்ளது.
இதேபோல, கடந்த ஆண்டு இந்தியா சார்பில் மலையாள படமான 'ஜல்லிக்கட்டு' தேர்வானது குறிபிடத்தக்கது.