You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நிழலுலக தொடர்புகள் மூலம் ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மிரட்டினர் - ஷெர்லின் சோப்ரா

ராஜ்குந்த்ரா பற்றி சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய அவர், ராஜ்குந்த்ரா மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டையும் சுமத்தியிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 19ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இன்றைய நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    • நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு

      தங்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ரூ. 50 கோடி மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் பாலிவுட் பிரபல தம்பதியான ராஜ்குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி.

      "இடுப்பு பெல்டுக்கு கீழே அசிங்கமானவர்கள்," என்று பொதுவெளியில் தங்களைப் பற்றி அவதூறாக ஷெர்லின் பேசியதாகக் கூறி அவரது மன்னிப்பை வேண்டியுள்ள ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி தரப்பு, வழக்கறிஞர் மூலம் அதற்கான நோட்டீஸயும் அனுப்பியுள்ளனர்.

      மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின்பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

      அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தங்களை விமர்சித்து ஷெர்லின் சோப்ரா வெளியிட்ட கருத்து, போலியானது, தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று ராஜ்குந்த்ராவும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டியும் கூறியுள்ளனர்.

      தங்களிடம் இருந்து பணத்தை கறப்பதற்காக இப்படியொரு அபாண்டமான புகாரை ஷெர்லின் சோப்ரா சுமத்தியிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

      இந்த நோட்டீஸ் குறித்த தகவல் ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில் ஷெர்லின் சோப்ரா தமது ட்விட்டர் பக்கம் மூலமாக ராஜ்குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் தங்களுடைய நிழலுக தொடர்புகள் மூலம் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

    • வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழக மீனவர் கொல்லப்பட்டாரா? - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட், பிரபுராவ் ஆனந்தன்-இந்தியா, ரஞ்சன் அருண் பிரசாத்-இலங்கை

      இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு திங்கட்கிழமை இரவு இலங்கை கடல் பகுதியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மேலும் ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

      இந்த விவகாரத்தில் காணாமல் போன மீனவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இத்தகைய சூழலில் அங்குள்ள சமீபத்திய நிலவரத்தை தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் நிருபர்கள் பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் விசாரித்தனர்.

      இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

    • உத்தர பிரதேசத்தின் புதிய விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கும் இலங்கை விமானம், ரஞ்சன் அருண்பிரசாத், இலங்கை

      இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை (அக்டோபர் 20) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 100 பெளத்த பிக்குகளுடனான இலங்கை விமானம் குஷி நகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறக்குவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

      இலங்கை புத்தசாசன அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

      வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் இலங்கை விமானம் முதலாவதாக குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குமாயின், அது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

      இந்திய பிரதமரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இலங்கை விமானம் முதலாவதாக குஷி நகர் விமான நிலையத்தில் நாளை தரையிறங்கவுள்ளது.

      கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர் தலைமையிலான பெளத்த பிக்குகள் குழுவினரே நாளை இந்த விமானத்தில் பயணிக்கவுள்ளனர்.

      நாளை பெளத்தர்களின் புனித நாளான பெளர்ணமி தினத்திலேயே இந்த விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்படுகின்றது.உத்தர பிரதேசத்தின் குஷிநகர் பகுதியிலேயே கெளதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்துள்ளார்.இலங்கையில் பெளத்த மதத்தை பின்பற்றுவோருக்கு குஷிநகர் மிக முக்கிய நகரமாக விளங்குகின்றது.இவ்வாறான பின்னணியிலேயே, பெளத்த பிக்குகளுடனான குழுவினர் நாளை, குஷிநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு முதல் முதலாக செல்கின்றனர்.இவ்வாறு குஷிநகர் செல்லும் இலங்கை குழுவில், அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    • நீக்கிய சில மணி நேரத்தில் பணியில் ஊழியரை சேர்த்துக் கொண்ட ஜொமேட்டோ

      இந்தி நமது தேசிய மொழி, அதை சிறிதளவாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஜொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருக்கிறார்.

      உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறிய ஜெமாட்டோ, இந்த நிகழ்வுக்காக மன்னிப்புக் கோரியது.

      இந்த நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், அந்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவாகத் தெரிவித்துள்ளார்.இது குறித்த முழுமையான பின்னணி தகவல்களை அறிய Linkஇங்கே சொடுக்கவும்.

    • வந்துகொண்டிருக்கும் செய்தி, உத்தராகண்ட் மாநிலத்தில் பலத்த மழை - குறைந்தபட்சம் 16 பேர் பலி

      உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால், குமான் பகுதியில் பலத்த மழை காரணமாக குறைந்தது 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை அந்த மாநில பேரிடர் மேலாண்மை படை துணைத் தலைவர் ரித்திம் அகர்வால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

      நைனிடால், அல்மோரா பகுதியில் ஐந்து பேர், பாரி கர்வால் பகுதியில் நான்கு பேர், சம்பாவாட், பித்தோரகர் பகுதியில் தலா ஒருவர் ஆகியோர் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

      மற்ற இடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு வருகிறது.

      நைனிடால், சம்பாவாட், பித்தோரகர், பாகேஸ்வர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் மீட்புப்பணிகளில் தொய்வு காணப்படுகிறது. கர்வால் மாவட்டத்தில் மழை பொழிவு நின்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட ஜொமேட்டோ: ட்விட்டரில் வைரலாகும் உரையாடல்கள்

      ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

      நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.

      அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்தை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    • இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியது ஒருவர் மாயம், பிரபுராவ் ஆனந்தன்

      இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரின் கதி என்ன என்று தெரியவில்லை.

      மீட்கப்பட்ட மீனவர்கள் முதலுதவி செய்யப்பட்ட பிறகு இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

      அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றார்களா அல்லது இலங்கை கடற்படை கப்பல் மோதி இவர்களின் படகு மூழ்கியதில் இந்த சம்பவம் நடந்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

      புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

      இதில் ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

      இந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர்களின் படகு திசை மாறி இலங்கை கடலுக்குள் சென்றபோது அவர்களின் கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது.

      இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதாகவும் அவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமில் முதலுதவி செய்த பிறகு அவர்களை தற்போது வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

      கடலில் மூழ்கியவரும் படகை ஓட்டியவருமான ராஜ்கிரனை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்த தகவல் இந்திய தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • லக்கிம்பூர் கார் மோதல் சம்பவம்: பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது

      உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்த கார் மோதல் வழக்கில் உள்ளூர் பாஜக பிரமுகர் சுமித் ஜெய்ஸ்வால் உள்பட நான்கு பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

      முன்னதாக இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்த காவல்துறையினர் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத சிலர் என்று மட்டும் கூறியிருந்தது.

      இது குறித்து லக்கிம்பூர் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் சிலர் பலியான வழக்கில் சுமித் ஜெய்ஸ்வால், சிசுபால், நந்தன் சிங் பிஷ்ட், சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்ய பிரகாஷ் திரிபாதி தரப்பில் இருந்து உரிமம் பெற்ற ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.

      உள்ளூரில் பாஜக பிரமுகராக அறியப்படும் சுமித் ஜெய்ஸ்வால், சம்பவம் நடந்தபோது வாகன தொகுப்பில் இருந்து தப்பி ஓடிய வைரல் காட்சிகள் அது தொடர்பான காணொளியில் தெரிய வந்தது.

      அவர் சென்ற எஸ்யுவி ரக வாகனம்தான் விவசாயிகள் மீது மோதியது.

      அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது நண்பர், கார் ஓட்டுநர், இரண்டு பாஜகவினரை அடையாளம் தெரிய சிலர் அடித்துக் கொன்றதாக காவல்துறையில் சுமித் ஜெய்ஸ்வால் புகார் கூறியிருந்தார். அதன்பேரில் பெயர் குறிப்பிடாத சிலர் மீது காவல்துறை மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

    • ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியா

      வட கொரியா - ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் குறைந்தபட்சம் ஒரு பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வட கொரியா செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளன.

      வட கொரியாவின் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்ததாக தென் கொரியாவின் ஒருங்கிணைந்த முதன்மை ராணுவ தளபதி தெரிவித்தார்.

      தென் கொரியா, ஜப்பான், அமெரிக்க உளவுத் துறை தலைவர்கள், தென் கொரிய தலைநகரான சியோலில் இந்த வாரம் சந்திக்க உள்ளனர். இரண்டு பெலாஸ்டிக் ஏவுகணைகள் வந்ததாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார். மேலும் இது வருத்தத்துக்குரியது என்றும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. சில ஏவுகணை பரிசோதனைகள் கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக உள்ளது. பெலாஸ்டிக் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகளை வடகொரியா பரிசோதிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் தடைவிதித்திருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

    • பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு வரவேற்கிறோம்!

      பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

      இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் பரணிதரன், கெளதமன் முராரி, மணிகண்டன். நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.