உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்த கார் மோதல் வழக்கில் உள்ளூர் பாஜக பிரமுகர் சுமித் ஜெய்ஸ்வால் உள்பட நான்கு பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்த காவல்துறையினர் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத சிலர் என்று மட்டும் கூறியிருந்தது.
இது குறித்து லக்கிம்பூர் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் சிலர் பலியான வழக்கில் சுமித் ஜெய்ஸ்வால், சிசுபால், நந்தன் சிங் பிஷ்ட், சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்ய பிரகாஷ் திரிபாதி தரப்பில் இருந்து உரிமம் பெற்ற ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.
உள்ளூரில் பாஜக பிரமுகராக அறியப்படும் சுமித் ஜெய்ஸ்வால், சம்பவம் நடந்தபோது வாகன தொகுப்பில் இருந்து தப்பி ஓடிய வைரல் காட்சிகள் அது தொடர்பான காணொளியில் தெரிய வந்தது.
அவர் சென்ற எஸ்யுவி ரக வாகனம்தான் விவசாயிகள் மீது மோதியது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது நண்பர், கார் ஓட்டுநர், இரண்டு பாஜகவினரை அடையாளம் தெரிய சிலர் அடித்துக் கொன்றதாக காவல்துறையில் சுமித் ஜெய்ஸ்வால் புகார் கூறியிருந்தார். அதன்பேரில் பெயர் குறிப்பிடாத சிலர் மீது காவல்துறை மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.