காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், அடுத்த 10 நாட்களுக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கூட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆம் கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமி்ழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கர்நாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் காவிரி விவகாரத்தில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய நீர் வளத்துறை தலைமை பொறியாளர் சுஷில் குமாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர், தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு விவரங்களை விளக்கினார்.
தமிழ்நாட்டின் நீர்த் தேவையை கருதி உடனடியாக பிலிகுண்டுலுவில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிலுவையில் உள்ள நிரையும் மாதாந்திரவாரியான நீரையும் உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த இரு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், அதன் பிறகும் கர்நாடகம் உரிய நீரை திறந்து விடவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங் வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தையும் விரைவாக கூட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடகா நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய 14 டிஎம்சி நீரையும் பிலிகுண்டுலுவில் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை அடுத்த 10 தினங்களுக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.