நீலகிரி மாவட்ட வனத்துறைக்கு கடும் சவாலை கூடலூரை சேர்ந்த டி23 புலி ஏற்படுத்தி வருகிறது. 11வது நாளாக நீடிக்கும் தேடுதல் வேட்டையில், ` புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக மனிதர்களை இலக்காக வைத்து தாக்குதலை நடத்தி வந்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, மேன் ஈட்டர் எனப்படும் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வனத்துறை ஊழியர்கள், அதிரடிப் படை போலீஸார், கும்கி யானைகள், மோப்ப நாய்கள் என பெரும் படையே தேடுதலில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்ததாக, மனிதர்களைத் தாக்குவதற்கு முன் அந்தப் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ` 11 (1) (ஏ) என்ற சட்டப்பிரிவின்கீழ் புலியை சுடுவதற்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், அதற்கான வழிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை.
`நான்கு பேரையும் கொன்றது இந்தப் புலிதானா?' என்பது நிரூபிக்கப்படவில்லை. நீலகிரி வனத்துறையின் இந்தச் செயல், தேசிய புலிகள் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.
மேலும், அந்தப் புலிக்கு சீரான அளவில் மயக்க ஊசியை செலுத்தி உயிருடன் பிடிக்க வேண்டும். அந்தப் புலி பிடிபட்டாலும் வன உயிரின பூங்காங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விவாதத்தை ஏற்படுத்தவே, மயக்க மருந்து செலுத்தியே புலியைப் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், சங்கீதா தோக்ரா தொடர்ந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை அளித்த விளக்கத்தில், புலியை உயிருடன் பிடிக்கவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ` நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தப் புலி (MD T23) ஆள்கொல்லியாக இல்லாமல்கூட இருக்கலாம். எனவே, அதைக் கொல்ல முயற்சிக்க வேண்டாம்.
இந்தத் தேடுதல் பணியில் பிற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் .புலியின் நடவடிக்கையை கண்காணித்து அதற்கு உரிய சிகிச்சை சிகிச்சையளிக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை இரண்டுவார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.