தமிழ்நாடு காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் அளித்த பாலியல் புகாரை தெலங்கானா மாநில காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்திருந்தார். பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு வராமல் இந்த மனு இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கும் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவருக்கு எதிரான புகாரை விசாரித்தால் தமக்கு நியாயம் கிடைக்காது என பெண் எஸ்.பி செய்த முறையீட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்கை தெலங்கானாவுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தமது புகாரை தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்றப்புலனாய்வுத்துறையே விசாரிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பெண் எஸ்.பியும் தமது புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்க தமக்கு ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மூன்று மனுக்களையும் இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
அந்த பெண் எஸ்.பி. கடைசியாக தமது புகார் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அவரது புகாரை தமிழக சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருந்ததால், அவரது புகார் விசாரிக்கப்படாமலேயே இருந்தது.
சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. தான் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது, தமது துறையின் இணை இயக்குநராக இருந்த அதிகாரி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தன்னை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி புகார் கூறியிருந்தார். பின்னர் அவர் அந்த துறையில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டபோதும், அதே துறையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி தொடர்ந்தார்.
இதனால், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த அலுவலகத்தின் சிசிடிவி கேமரா தடயங்களை அந்த அதிகாரி அழிக்கலாம் என்று அச்சம் தெரிவித்து புகார்தாரரான பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.