தமது பாலியல் புகார் மீது விமானப்படை சரியான நடவடிக்கை எடுக்காததால் சிவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கட்டாயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
29 வயதாகும் அந்த பெண் அதிகாரி கோவை விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
கோவை ரெட்ஃபீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் கடந்த 10ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற நிலையில், தன்னை ஃபிளைட் லெப்டிணன்ட் பதவியில்உள்ள அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் கூறியிருக்கிறார்.
இந்த மையத்தில் கடந்த மாதம்தான் விமானப்படையைச் சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது.
அந்த பெண் அளித்த புகாரின்படி, விளையாட்டில் ஈடுபட்டபோது காயம் அடைந்த தான், மாத்திரையை உட்கொண்டு விட்டு தூங்கி விட்டதாகவும் கண் விழித்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில் கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரம்பநிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கைது செய்யப்பட்ட அதிகாரி, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புகார்தாரரான பெண் அதிகாரியை அதே விமானப்படை தளத்தில் பணியாற்றும் ஃபிளைட் லெப்டிணன்ட் பதவி வகிக்கும் ஆண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, தனக்கு எதிராக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி முன்பாக சரண் அடைந்தார்.
அப்போது விமானப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவகாரங்களில் விசாரணை நடத்த காவல் துறைக்கு வரம்பு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், விமானப்படை நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை என்பதாலேயே காவல்துறையின் உதவியை நாடியதாக கோவை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து சரண் அடைந்த ஆண் அதிகாரியை உடுமலைப்பேட்டை சிறையில் நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.