தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.
தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது.
அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு அளித்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம், அது அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அந்த அறிக்க குறிப்பிட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்துக்கு ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தால் ஏற்பட்டிருந்த ஆபத்தை ஒழிப்பதில் தங்களது ஆளில்லா விமானத் தாக்குதல் வெற்றிகரமாக இருந்ததாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு முன்னர் கூறியிருந்தது.