எம்.பிக்கள் ஆங்கில மொழியில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அனுப்புமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "தமிழ்நாட்டில் எம்.பி.கள் ஆங்கிலத்தில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கில மொழிகளிலேயே பதில் அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பான சட்ட நடைமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு, மனுதாரருக்கு ஹிந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டதால் அந்த செயல், விதியை மீறுவதாக கருதக்கூடாது என குறிப்பிடப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் காவல் படை பணிக்கு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. அதில், வட மாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, கிழக்கு மாநிலங்களில் தலா ஒ இடமும் தேர்வு எழுதும் மையங்கள் உள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மையங்கள் இல்லை. இதனால், புதுச்சேரியில் மையம் அமைக்குமாறு மத்திய உள்துறைக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
அவருக்கு ஹிந்தி மொழியில் உள்துறை இணை அமைச்சர் பதில் அனுப்பினார். அதன் உள்ளடக்கத்தை அறிய முடியாததால் மீண்டும் இணை அமைச்சருக்கு வெங்கடேசன் கடிதம் எழுதி, அந்த கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு ஆங்கில மொழியில் பதில் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அரசு தரப்பிடம் இருந்து பதில் வரவில்லை.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.