புதுச்சேரியில் 5 வயதிற்கு உட்பட்ட 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறையத் தொடங்கியதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனிடையே கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 21 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பச்சிளங் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில், ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
மீதமுள்ள 4 குழந்தைகளுக்கு முடிவுகள் நிலுவையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கொரோனா குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
"புதுச்சேரியில் கொரோனா மூன்றாவது அலை பரவல் ஏதும் ஏற்படவில்லை. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதினால் கொரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்க முடியும்," எனப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.
இதனிடையே புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் மற்றும் பல துறைகளை சார்ந்த செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஒருவேளை குழந்தைகளை தாக்கினால் அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது," என்றார்.
தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கலாம் எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும்.
குழந்தைகளை வெளியே கூட்டி செல்வதையும், உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து குழந்தை நல மருத்துவர்களும், பொது நல மருத்துவர்களும் குழந்தைகளுக்கு கொரோனா தொடரில் ஏற்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என துணை நிலை ஆளுநர் பேசினார்.
குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் அபாய கட்டத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக இயங்க வேண்டும். பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இதனை முழு கவனத்தில் கொண்டு எப்பொழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்," என்று சீராய்வு கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.