இந்திய அரசின்
சினிமாட்டோகிராஃப் திருத்தச் சட்டம் 2021க்கு தமிழ்நாடு
அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திரைப்படச் சான்றிதழ் வாரியம், மாநில அரசுகளின் உரிமைகளை இந்தச் சட்டம் குறைப்பதோடு, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசின்
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாதிற்கு மு.க. ஸ்டாலின்
எழுதியுள்ள கடிதத்தில், "இந்தச் சட்டம் திரைத்துறையினர் மத்தியில்
மட்டுமல்லாது, கருத்துச் சுதந்திரத்தின் மீது அக்கறையுள்ள
சமூகத்தினரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு துடிப்புமிக்க ஜனநாயகத்தில் கலை ரீதியான சிந்தனைக்கும் சுதந்திரத்திற்கும்
இடமுண்டு. ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்னால் உச்ச
நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட மத்திய அரசின் மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை இந்தச்
சட்டம் மீண்டும் சேர்க்க முயல்கிறது.
இந்திய
சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் பிரிவின் ஐந்து - ஏவைப் பூர்த்தி செய்யும் அனைத்துப்
படங்களுக்கும் மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கி வருகிறது.
தகுதியான காரணங்களோடு திரைப்படத்தை நிராகரிக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. அதே
சட்டத்தின்பிரிவு ஐந்து - பியின் படி, விதிமுறைகள் என்ற வடிவில் கூடுதலான கட்டுப்பாட்டு அதிகாரமும்
வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடுதலான சட்டங்கள், விதிகளின் மூலம் 21ஆம் நூற்றாண்டிலும் கருத்துச் சுதந்திரத்தை
முடக்குவது சரியாகாது.
ஒரு
திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், அனுமதி அளித்துவிட்டால், அந்தத் திரைப்படத்தை திரையிட அனுமதிப்பது
குறித்த அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. ஏனென்றால் சட்டம் ஒழுங்கு என்பது
மாநில அரசின் கையில் உள்ள அதிகாரமாகும்.
ஆனால், மத்திய அரசுமுன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம்
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதோடு, மாநில அரசு மற்றும்
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களிலும் தலையிடுகிறது. அதற்கு
முன்னோட்டத்தைப் போல திரைப்படச் சான்றிதழுக்கான மேல்முறையீட்டு வாரியமும்
கலைக்கப்பட்டது.
திரைப்பட
சான்றிதழ் வாரியம் சான்றிதழ் அளித்த பிறகு, மறு ஆய்வு
செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அளிப்பது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (2)ல் குறிப்பிடப்பட்டுள்ள “reasonable restriction" என்ற பதத்தை தவறாகக் கையாளுவதாகும். திரைப்படத்
துறையினர் கலைரீதியாக சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, இப்படித்தான் திரைப்படம் எடுக்க வேண்டுமெனச் சொல்வது ஏற்க முடியாதது.
இந்திய
அரசியல் சாசனத்தின் அடிப்படையான லட்சியங்களுக்கே இது முரணானது. சிந்திக்கும்
உரிமையைப் பறிப்பது நமது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும். எந்தக் கட்சி ஆட்சியில்இருந்தாலும் ஜனநாயகம் துடிப்புமிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில அம்சங்களைச் நடைமுறையில் செயல்படுத்துவதும் கடினம்.
குறிப்பாக, வயதுவாரியாக திரைப்படங்களுக்குச் சான்றிதழ்
அளிப்பது. சில திருத்தங்கள் திரைப்படம் எடுப்பதேயே மிகுந்த சவாலான, ஆபத்தான காரியமாக மாற்றுகின்றன.
மேலே சொன்ன கருத்துகளையும்
திரைத்துறையினரின் உண்மையான கவலைகளையும் மனதில் கொண்டு இந்திய சினிமாட்டோகிராஃப்
சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களைக் கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய
சினிமாட்டோகிராஃப் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை இந்திய அரசின்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 18ஆம் தேதி
வெளியிட்டது. அப்போது முதல் திரைத் துறையினர் இந்தச் சட்டம் குறித்து தங்களது
எதிர்ப்பையும் அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.