தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான ஈரோடு,திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுஅம்மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுகளை முடித்துவிட்டு கோவை வந்தடைந்த முதல்வர்,சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
கொரோனா பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரித்தார்.
மேலும்,கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குஅளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாகவும் முதல்வர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக,கோவை மாநகராட்சியி்ன்5மண்டலங்களுக்கு தலா10கார் ஆம்புலன்ஸ் வீதம், 50கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர்கள்,சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து,இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழக முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.