புதுச்சேரியில் 60 நாட்களுக்கு பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்க இருந்த மதுபான கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகத் திறப்பதில் தாமதமானது. இதனிடையே, கொரோனா சிறப்பு வரியுடன் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகளும் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது .
நகர மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில், மது வாங்கக் காலை முதலே ஒவ்வொரு கடைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
மதுபான கடைகளில் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மது வாங்க வருவோருக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கின்றனர். நபர் ஒருவருக்கு நான்கரை லிட்டர் அளவில் மது பானங்கள் வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது தமிழகத்திற்கு இணையான வரியை அமல் படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரியில் மட்டும் 920 வகையான மதுபான வகைகள் உள்ளது, இதில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் ஒப்பிடும் போது 154 ஒரே மாதிரியான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 154 மது பானங்களுக்கும் தமிழகத்தில் விற்கப்படும் அதே விலையைப் புதுச்சேரியிலும் நிர்ணயித்துள்ளனர். இதைத் தவிர்த்து மற்ற மதுபானங்களுக்குக் கொள்முதல் விலையிலிருந்து 25 சதவீதம் வரியானது உயர்த்தப்பட்டுள்ளது. சாராயக் கடைகளுக்கு 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
"இவை அனைத்தும் தமிழகத்தை விடப் புதுச்சேரியில் விலை குறைவாக இருக்கிறது என்று வெளிமாநிலத்தவர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் மதுபானத்தின் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக," கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
"மதுபானக் கடைகளை 60 நாட்களுக்குப் பிறகு திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மது பானங்களுக்குத் தமிழகத்திற்கு இணையான விலையை அதிகப்படுத்தியது வருத்தம் அளிக்கிறது. இருந்த போதிலும், இந்த வரியை கொரோனா தடுப்பு பணிகளுக்குப் பயன்படுத்த இருக்கின்றனர் என்று கேள்விப்படும் போது ஆறுதல் அளிப்பதாக," தெரிவிக்கிறார் மதுபானம் வாங்க வந்த தாமஸ்.