You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது; உயிரிழப்பு 103ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரஸ் நேரத்திலும் உணவு வழங்கும் வடலூரின் அணையா அடுப்பு

    கொரோனா ஊரடங்கு காரணமாக வீடற்றவர்கள் பசியில் வாடும் நேரத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்துகின்றனர்.

  2. புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

    புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட நேற்று ஒரு நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்நோய்த் தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

    புதுச்சேரி சேர்ந்த 16 பேர், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த இருவர் என 19 பேரும், கூடுதலாக ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே, சென்னையிலிருந்து திரும்பிய இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று காலை சுகாதாரத்துறை அறிவித்தது.

    இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்

    இந்நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, 4 பேரும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் எல்லைகள் முடக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.

    ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இ-பாஸ் இன்றி வெளிமாநிலத்தில் இருந்தது புதுச்சேரிக்குள் அனுமதிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  3. 8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்

    கொரோனா பெருந்தொற்று காரணமாக, உலகில் 8 கோடி பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    உலகின் மருத்துவ அமைப்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழை நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் அம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது பாதிக்கப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    குறைந்தது 68 நாடுகளில் இந்த பாதிப்பு இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

  4. கொரோனா: மோசமான நிலையில் யேமன்

    போரினால் பாதிக்கப்பட்ட யேமனின் சுகாதார அமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது என்றும் ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

    சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபரகணங்கள் இல்லாததால், பல கொரோனா நோயாளிகள் திரும்ப அனுப்பப்படுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

    கொரோனாவால் 30 பேர் இறந்துள்ளதாக யேமனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஐ.நா கூறுகிறது.

    பல ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போரால் இந்த நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  5. ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தால் 'மரணிக்க வாய்ப்பு அதிகம்'

    மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் இந்த ஆய்வு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

  6. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடாகா சென்றால் 22 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்

    தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் கர்நாடகாவுக்கு வரும் பயணிகள், 7 நாட்கள் அரசு ஒதுக்கும் இடத்தில் தனிமையில் இருக்க வேண்டும். அதன் பிறகு 15 நாட்டில் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என கர்நாடகா டிஜிபி பிரவீன் கூட் தெரிவித்துள்ளார்.

  7. முஸ்லிம்கள் தொழுகை நடத்த இடம் தந்த தேவாலயம்

    ஜெர்மனியில் மே 4-ம் தேதி முதல் மத வழிபாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை.

    இதனால்,அங்குள்ள மார்தா லூதேரன் கிருஸ்துவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  8. கொரோனா: உலகளவில் இரண்டாம் இடத்தில் பிரேசில்

    பிரேசிலில் 330,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

    நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இருந்த பிரேசில் இன்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது..

    இதுவரை 21,048 பேர் அங்கு இறந்துள்ளனர்.

  9. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சலூன், பார்லர்கள் செயல்பட அனுமதி

    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை நாளை(மே 24) முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கலாம்.

    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இந்த புதிய தளர்வு இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களை திறக்க கடந்த வாரம் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது,

    இந்தநிலையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்டு பகுதி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் கடைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

  10. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 6654 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 137 பேர் இறந்துள்ளானர்.

    இந்தியாவில் மொத்தம் 125101 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3720 மரணங்கள் பதிவாகியுள்ளது என இந்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

  11. அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

    கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

    அங்கு இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை காலை நிலவரப்படி அங்கு 95,979 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

    அமெரிக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்புகள் என்பதை புரிந்து கொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்.

  12. நேற்று நடந்தவை - சில முக்கிய தகவல்கள்

    • கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தின் காப்புரிமை பெறப்படாத வகையை (Generic version) உலகில் முதன் முதலில் உருவாக்கியுள்ளதாக வங்கதேசத்தை சேர்ந்த பெக்சிம்கோ மருந்து நிறுவனம் கூறியுள்ளது.
    • தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.
    • கொரோனாவால் நாடு நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து எவ்வித இலக்குகளை நிர்ணயிக்கப்படாது என சீனா முடிவு செய்துள்ளது.
    • உலக நாடுகள் பலவும் படிப்படியாக முடக்க நிலையை தளர்த்தி வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டுதலை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. வெளியிட்டது.
    • கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை (HCQ) பயன்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலை இந்திய அரசு வெளியிட்டது.
    • இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் தேதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
  13. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லியில் இருந்து அபர்ணா ராமமூர்த்தி மற்றும் புதுவையிலிருந்து நந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.