மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி தலத்தில் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.
மதுரை நகருக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்ட இந்த ஆய்வில் மார்ச் மாதம் 20ஆம் தேதிவரை கொந்தகை பகுதியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி முதல் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கீழடியிலும் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுவருவதால், இன்று முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்று முதல் துவங்கப்பட்டிருக்கும் அகழாய்வில் முதற்கட்டமாக கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் 40 பணியாளர்களுடன் இந்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த ஆறாம்கட்ட அகழாய்வில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன. கொந்தகை கிராமத்தில் மனித எலும்புக்கூடு ஒன்றும் கிடைத்தது.
கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த ஐந்து கட்ட அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது.
இந்த ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது.
இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என்றும் கீழடி பகுதியில் வாழ்ந்தவர்களின் ஈமக்காடாக இந்த இடம் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மீதமுள்ள, மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.