You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - சென்னையில் நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் ஒருலட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்

  2. டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

    டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பல இடங்களில் வாகன நெரிசலில் ஏற்பட்டுள்ளது.

  3. ஐரேப்பிய மக்கள் இப்போது சுற்றுலா செல்ல திட்டமிடக்கூடாது

    ஐரோப்பிய மக்கள் இவ்வளவு சீக்கிரமாக வெளிநாடுகளுக்கு சென்று கோடை விடுமுறைகளை கொண்டாட நினைப்பது தவறு என உலக மருத்துவ சங்கத்தின் தலைவர் ஃபிராங்க் உல்ரிச் மாண்ட்கோமெரி கூறியுள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், விரைவில் நாட்டு எல்லைகளை திறந்து சுற்றுலா துறையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    ஐரோப்பிய நாடுகள் இடையிலான கட்டுப்பாடுகள் தளத்தப்படுவது அச்சமடைய வைக்கிறது எனவும் ஃபிராங்க் கூறியுள்ளார்.

  4. சென்னையில் பரிதவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் -நடப்பது என்ன?

  5. பல் மருத்துவமனைகளை திறக்க அனுமதி

    இந்தியாவில் பல் மருத்துவமனைகள் இயங்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு பகுதிகளில், அவசர பல் சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை பகுதிகளில், வழக்கமான பல் ஆலோசனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர அறுவை சிகிச்சைகளையும் செய்யலாம்.

  6. அமெரிக்கா மீது சீனா விமர்சனம்

    உலக சகாதார அமைப்பின் செயல்பாடு குறித்த கருத்துவேறுபாட்டால் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்சனை அதிகரித்துள்ளது.

    கொரோனா பிரச்சனையை டிரம்ப் அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதை திசைதிருப்பவே உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

    தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை தவிப்பதற்காக சீனா மீது அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாக சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்

    உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிச்கை செய்திருந்தார்.

    வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவி வருவது தொடர்பான செய்திகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

    அந்த அமைப்பு சீனாவைத் தொடர்ந்து பாராட்டி வருவதாகவும், சீனத் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதாக காட்டினால் மட்டுமே அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  7. ஐரேப்பிய ஒன்றியத்தில் கார் விற்பனை 76% சரிவு

    கொரோனா வைரஸால் ஐரேப்பிய ஒன்றியத்தில் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 71 ஆயிரம் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இதே மாதம் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை விட இது 76% குறைவு

  8. கொரோனா வைரஸால் பறிபோன கோயில்களின் வருமானம்

    கொரோனா வைரஸ் பரவல் தொழில்சாலைகளையும், வியாபரங்களையும் மட்டுமல்ல, இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்தியாவின் பணக்கார கோயில்கள் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இதனால் ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.

  9. சீனாவிடம் இருந்து மற்றொரு அடியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவிடமிருந்து மற்றொரு பெரும் அடியை இன்று எதிர்கொண்டது.

    தங்கள் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் பார்லிக்கு 80% வரியை சீனா விதித்துள்ளது.

    சீனாவின் விருப்பத்திற்கு எதிராக, கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து உலகளாவிய விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தின் இறக்குமதிக்கு கடந்த வாரம் சீனா தடை விதித்திருந்தது.

    ஆஸ்திரேலியாவின் விசாரணை கோரிக்கைக்கும், தாங்கள் எடுத்தும் வர்த்தக நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா கூறியுள்ளது.

  10. 450 கிமீ நடந்து செல்லும் குழந்தை- இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவலநிலை

  11. இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா

    இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதில் 559 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 424 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  12. கொரோனாவால் பிரிட்டனில் அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்

    கொரோனா வைரஸால் பிரிட்டனில் இளைஞர்கள் குறிப்பாக 18-24 வயதினர் வேலை இழந்துள்ளதாகவும் அல்லது அவர்களது வருமானம் குறைந்துள்ளதாகவும் ரெசொல்யூஷன் அறக்கட்டளை கூறியுள்ளது.

    இந்த வயதினரில் மூன்றில் ஒரு பங்கினர், முன்பு சம்பாதித்தை விட குறைவாகவே சம்பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது

  13. மக்களுக்கு கூடுதல் விடுமுறை: நியூசிலாந்தில் திட்டம்

    கொரோனா காரணமாக உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு கூடுதல் விடுமுறைகளை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

    நியூசிலாந்து பொருளாதாரம் அதிகளவில் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. ஆனால், இப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால், இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம்

    கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

  15. ஆஸ்திரேலியா: 100ஐ எட்டியது கொரோனா மரணம்

    ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனாவுக்கு 100 பேர் மரணமடைந்துள்ளனர்.

    முதியோர் முகாமில் வசித்து வந்த 93 வயதான பெண், 100வது மரணமாக பதிவாகியுள்ளார். சிட்னில் உள்ள இந்த முதியோர் முகாமில் மட்டும் 19 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் தொற்று எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் மேற்குலக நாடுகளை விட குறைவாக உள்ளாது. இங்கு இதுவரை 7000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது

  16. கொரோனாவுக்கு எதிராக போரிட நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கும் தடுப்பூசி

    கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, மக்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மோடெர்னா கூறியுள்ளது.

    தங்களது பரிசோதனையில் பங்கேற்ற 8 பேரின் உடலிலும் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் ஆன்டிபாடிகள் காணப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸுக்கு எதிரான உண்மையில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறதா என்பதை பார்க்கும் பெரிய அளவிலான பரிசோதனை ஜூலை மாதம் தொடங்க உள்ளது.

    எதிர்பார்த்ததை விட வேகமாக பரவும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகளவில் 80க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

  17. கொரோனா: உலகளவில் மூன்றாம் இடத்தில் பிரேசில்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

    இங்கு 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 16,853 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவை கையாளும் விதத்தில் பிரேசிலில் மாற்றுக்கருத்துகள் நிலவுகிறது. மாநில அரசுகள், பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், வைரஸை விட பொது முடக்கம் ஆபத்தானது என அதிபர் சயீர் பொல்சனாரூ கூறியிருந்தார்.

  18. டெல்லியில் இன்று முதல் பொது போக்குவரத்து துவக்கம்

    இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.

    ஒரு நேரத்தில் ஆட்டோவில் 1 பயணியும், காரில் இரண்டு பயணிகளும், பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  19. பல்வேறு இடங்களில் விபத்து: 16 தொழிலாளர்கள் பலி

    பீகாரின் பகல்பூர் பகுதியில் தொழிலாளர்கள் பயணித்த லாரியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். லாரி விபத்தில் சிக்கிய பிறகு சாலையில் கவிழ்ந்தது.

    மற்றொரு விபத்தில் மகாராஷ்டிராவில் இருந்து ஜார்க்கண்ட் சென்றுக்கொண்டிருந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பேருந்து இன்று அதிகாலை லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    அதே போல டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் இறந்துள்ளனர் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

  20. "உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது" - டிரம்ப்

    கொரோனா வைரஸை தடுப்பதற்காக தான் ஹைட்ரோகுளோரோகுயீன் மருந்தை உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் எச்சரிக்கையையும்மீறி தான் இந்த மருந்தை கடந்த இரண்டு வாரங்களாக உட்கொள்வதாகவும், தனக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

    மலேரியா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்துக்கு தொடர்ந்து டிரம்ப் ஆதரவளித்து வருகிறார். தற்போது வரை ஹைட்ரோகுளோரோகுயீன் கொரோனா சிகிச்சையில் பலனளிப்பது குறித்து தற்போது வரை எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை.

    முன்னதாக அமெரிக்காவின் உணவு மற்று மருந்து நிர்வாக அமைப்பு கூடகோவிட்-19 வைரஸுக்கு ஹைட்ரோகுளோரோகுயீன் மருந்து பாதுகாப்பானதாகவும், பலனிளிக்க கூடியதாகவும் இருப்பதாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என கூறியிருந்தது.

    இதுமட்டுமல்லாமல் மீண்டும் உலக சுகாதார நிறுவனத்தை விமர்சித்துள்ள டிரம்ப், சீனாவின் கைப்பொம்மையாக அந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ``நமக்கு உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான அறிவுரைகளை வழங்கியுள்ளது. மிகத்தவறாக உலக நாடுகளை வழிநடத்தியுள்ள அந்த நிறுவனம், எப்போதும் சீனாவின் பக்கமே இருந்து வருகிறது.`` எனவும் டிரம்ப் கடுமையாக சாடினார்.

    மேலும் உலக சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை எனில், அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்துவது குறித்த பரிசீலிக்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட் பதிவில், ``கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த நம்பகமான அறிக்கைகளை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார்.`` என குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா வைரஸை அமெரிக்க அரசு சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம், கோவிட்-19 வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் முன்னரே எச்சரிக்கைவில்லை என டிரம்ப் கூறி வருகிறார்.

    முன்னதாக கோவிட்-19 தொடர்பான இரண்டு நாள் ஆய்வுக்கூட்டத்தை உலக சுகாதார நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க செயலர், கோவிட் -19 வைரஸை பல உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு மோசமாக கையாண்டுள்ளதாகவும் விமரிசித்திருந்தார்.