‘கொரோனா வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு இது நேரமில்லை’ - சீனா

பட மூலாதாரம், Getty Images
இன்று நடக்கவுள்ள உலக சுகாதார அமைப்பின் முக்கிய கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின் பிங் உரையாற்றவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தோன்றியது மற்றும் பரவியது தொடர்பான ஆராய்ச்சி நடத்துவதற்கு இது நேரமில்லை. மிகவும் முன்கூட்டி இந்த முயற்சி செய்யப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் 3 லட்சம் பேருக்கும் மேல் இந்த வைரஸால் தற்போதுவரை உயிரிழந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆரம்பத்தில் பல தகவல்களை சீனா மறைத்ததாக சில தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டது.
கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என இன்று நடக்க உள்ள உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவரவுள்ளன.
இதுவரை இந்த தீர்மானத்திற்கு 116 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மொத்தம் 194 உறுப்பினர்கள் உள்ள இந்த அவையில், இத்தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான ஜாவ் லிஜான் கூறுகையில், கோவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கம் இன்னமும் முடியவில்லை என பல நாடுகளும் எண்ணிவரும் சூழலில், தற்போது இந்த விசாரணையை நடத்துவது மிகவும் முன்கூட்டியே நடத்துவது போலாகும் என குறிப்பிட்டுள்ளார்.













