''முகக்கவசங்கள் நாகரீக சமூகத்தின் அடையாளமாக போகிறது'' - பிரதமர் மோதி
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் மக்களால் ஆனதாகும். பொதுமக்கள் மற்றும் நிர்வாகம் என இருதரப்பும் சேர்ந்தே கொரோனா தொற்றை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த போரில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனும், போர் வீரர் தான் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் உணவில்லாமல் பசியில் ஒருவரும் தூங்கக்கூடாது என விவசாயிகள் உறுதி செய்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோதி, ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியை இந்நாட்டுக்கு செய்து கொண்டிருப்பதாக கூறினார்.
மத்திய மாநில அரசாங்கங்களின் ஒவ்வொரு துறையும் முழுவீச்சில் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் முகக்கவசம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அதனால், நாம் நோயாளிகள் என்று அர்த்தமில்லை. முகக்கவசங்கள் நாகரீக சமூகத்தின் அடையாளமாகப் போகிறது.
உங்களையும், மற்றவர்களையும் இத்தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், நீங்கள் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். பொது இடங்களில் எச்சில் துப்புவதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து வருவதாகவும், இனி அவ்வாறு நடந்துகொள்ள கூடாது என்றார்.