You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா தொற்று: இறுதி சடங்கை தடுத்தால் மூன்றாண்டு சிறை - தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது. 2. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ''முகக்கவசங்கள் நாகரீக சமூகத்தின் அடையாளமாக போகிறது'' - பிரதமர் மோதி

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் மக்களால் ஆனதாகும். பொதுமக்கள் மற்றும் நிர்வாகம் என இருதரப்பும் சேர்ந்தே கொரோனா தொற்றை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த போரில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனும், போர் வீரர் தான் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    இந்த இக்கட்டான சூழலில் உணவில்லாமல் பசியில் ஒருவரும் தூங்கக்கூடாது என விவசாயிகள் உறுதி செய்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோதி, ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியை இந்நாட்டுக்கு செய்து கொண்டிருப்பதாக கூறினார்.

    மத்திய மாநில அரசாங்கங்களின் ஒவ்வொரு துறையும் முழுவீச்சில் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

    கொரோனா வைரஸால் முகக்கவசம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அதனால், நாம் நோயாளிகள் என்று அர்த்தமில்லை. முகக்கவசங்கள் நாகரீக சமூகத்தின் அடையாளமாகப் போகிறது.

    உங்களையும், மற்றவர்களையும் இத்தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், நீங்கள் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். பொது இடங்களில் எச்சில் துப்புவதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து வருவதாகவும், இனி அவ்வாறு நடந்துகொள்ள கூடாது என்றார்.

  2. மாம்பழம் உள்ளிட்ட பழங்கள்,காய்கறிகள் சேமிக்கும் கிடங்குகளில் வாடகை ரத்து

    கொரோனா ஊரடங்கு காரணமாக,தமிழகத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களைகிடங்குகளில் சேமித்துவைப்பதற்கான வாடகையை ஒரு மாதத்திற்கு செலுத்த தேவையில்லை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை களைய நான்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர், பொது மக்களுக்கு விளைபொருட்கள் கிடைப்பதில் தடைகள் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்துவைக்கும் கிடங்குகளில் விவசாயிகள் தங்களது பொருட்களை சேமித்துவைக்க செலுத்தும் பயன்பட்டு கட்டணம் முழுமையாக ஒரு மாத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    ''15நாட்களில் மாம்பழ உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளிடம் இருந்து காய்கறி மற்றும் பழங்களை சேமிக்க பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் மாதம் வசூலிக்கப்படமாட்டாது. கட்டணத்தை அரசே ஏற்கும்,''என தெரிவித்துள்ளார்.

    நெல்,தானியங்கள்,பயறு வகைகள்,நிலக்கடலை,மிளகாய்,முந்திரி உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது,வியாபாரிகளிடம் சந்தைககட்டணமாகஒரு சதவீதம் வசூலிக்கப்படும்.

    இந்த கட்டணமும் ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள விளைபொருட்கள் மீது அடமானமாகப் பெறப்படும் கடனுக்கானஎன்றும் கிடங்கில் உள்ள பொருளின் மீதான ஐந்து சதவீத வட்டி இரண்டு மாதங்களுக்கு வசூலிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  3. தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது

    தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    .3,06,339 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    விதிமீறல் அபராதமாக இதுவரை 3.27 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

  4. செய்தியாளர் சந்திப்பால் என் நேரம் வீணாகிறது - அதிபர் டிரம்ப்

    தினமும் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பால் தனது நேரம் மற்றும் முயற்சிகள் வீணாவதாகக் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    சமீபத்தில் கிருமி நாசினி குறித்து தான் கூறிய கருத்தால் அமெரிக்க மருத்துவர்களின் கண்டனத்திற்கு அதிபர் டிரம்ப் ஆளானார்.

    கொரோனா வைரஸ் தடுப்புக் குழு மற்றும் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளும் செய்தியாளர்கள் சந்திப்பு பொதுவாக இரண்டு மணி நேரம் வரை நடைபெறும்.

    ஆனால் வெள்ளிக்கிழமை அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு வெறும் 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    மேலும் சனிக்கிழமை அன்று அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் "செய்தியாளர் சந்திப்பால் என்ன பயண்? எனக்கு எதிரான கேள்விகளையே ஊடகங்கள் கேட்கின்றன. அவர்கள் உண்மையை வெளியிடுவதில்லை. அமெரிக்கர்களுக்கு போலிச்செய்திதான் கிடைக்கிறது. என் நேரம்தான் வீண்" என்று தெரிவித்துள்ளார்..

  5. மருந்தகங்களில் கோவிட் 19 பரிசோதனை செய்ய அனுமதி

    நியூயார்க்கில் உள்ள மருந்தகங்களில் இனி கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அம்மாகாண ஆளுநர் ஆன்ட்ரு க்யூமோ தெரிவித்துள்ளார்.

    நியூயார்க்கில் மட்டும் உள்ள 5,000 மருந்து கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    இதனால் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 40,000 பேர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த பெண் தலைவர்கள்

    நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.

    மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.

    இந்த பதட்டமான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டுமென உலகிற்கு எடுத்துகாட்டும் விதமாக இந்த பெண் தலைவர்கள் உள்ளனர் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிட்-19 தொற்று சூழலை மிக சிறப்பாக கடந்து வரும் தலைவர்களாக இந்தப் பெண்கள் உள்ளனர். ஆனால் பெண்களால் உலகில் உள்ள ஏழு நாடுகள் மட்டுமே ஆட்சி செய்யப்படுகிறது என்ற விமர்சனங்களும் இருக்கிறது. சரி. பெண் தலைவர்களை வெற்றி பெறச் செய்வது எது?

  7. சீனாவில் என்ன நிலை?

    கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக இந்த வைரசால் ஒரு மரணம் கூட பதிவாகவில்லை. தென் கொரியாவிலும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவிற்கு யாரும் பலியாகவில்லை.

  8. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தொற்று குறைந்து வருவது போல தோன்றும் நிலையில், ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இத்தொற்றின் தீவிரம் அதிகாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    ஒருசில நாடுகளில் தற்போதுதான் கொரோனா தொற்றுப் பரவல் தொடங்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளளார்.

    கொரோனா தொற்றால் சில மாதங்களுக்கு முன்பே பாதிக்கப்பட்ட நாடுகளில், தற்போது அதன் தாக்கம் அதிகமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

    உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை வரைபட வடிவில் பிபிசி வழங்குகிறது.

  10. TB தடுப்பூசியால் இந்தியர்களுக்கு கொரோனா வராதா?

    பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என இதற்கு ஆதாரமாக அமெரிக்க கல்லூரி ஒன்றில் வெளியான ஆய்வையும் சுட்டிக்காட்டி சிரியா, இந்தியா என பல நாடுகளில் இப்போதும் ஒரு தகவல் உலவுகிறது. ஆனால் அந்த ஆய்வு சொல்வதென்ன? இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

  11. கொரோனா தொற்றால் உலகளவில் இரண்டு லட்சம் பேர் மரணம்

    கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

    உலகளவில் இத்தொற்றால் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதல் முதலில் சீனாவில் கடந்த ஜனவரி 11ஆம் தேதிதான் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் மரணம் நிகழ்ந்ததாக அந்நாடு கூறியது. சுமார் மூன்றே மாதங்களில் 2 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

    தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இத்தொற்று பரவல் உள்ளது.

    இதில் ஐந்து நாடுகளில் 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 53ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இத்தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.

  12. கொரோனா வைரஸ்: நேற்று நடந்த சில முக்கிய விஷயங்கள்

    • கொரோனா வைரஸ் தடுப்புக்காக உலகெங்கும் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்தும் விதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் என்றும் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் இல்லாதவர்கள் என்றோ உள்நாட்டு நுழைவு அனுமதி (விசா) கொடுப்பதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
    • கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும் அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக மாட்டார்கள் என்பதற்கும் எந்த விதமான ஆதாரமும் இதுவரை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது.
    • சிங்கப்பூரில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அங்கு நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,693ஆக அதிகரித்துள்ளது.
    • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,942 ஆக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது.
  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.