You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா தொற்று: இறுதி சடங்கை தடுத்தால் மூன்றாண்டு சிறை - தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது. 2. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை, சர்வதேச அளவில் நடந்த தகவல்களின் தொகுப்பு

  3. கருப்பு சந்தையில் முகக்கவசங்கள்

    கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் முகக்கவசங்களை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாரிஸின் வடக்கே உள்ள செயின்ட் டெனிஸ் எனும் நகரில் உள்ள ஒரு வீட்டில் சரக்கு வாகனம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்ட முகங்களை இறக்கி வைக்க முயன்றபோது தொழிலதிபர் ஒருவர் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முகக் கவசங்களை விற்பனைக்கு வைத்துள்ளவர்கள் அவற்றை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குமாறு கடந்த மாதம் பிரான்ஸ் அரசு கோரியிருந்தது.

  4. கட்டுப்பாட்டுடன் செயல்படும் மதக்குழுக்கள்

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை தென்கொரிய அரசு தளர்த்திய பிறகு அங்கு மதக் குழுக்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் மதரீதியான ஒன்று கூடல்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஷின்சியான்ஜி சர்ச் எனும் மதக் குழுவினர் தென்கொரியாவில் கோவிட்-19 பரவல் தொடங்கிய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கியதாக விமர்சனத்திற்கு உள்ளானது. கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், வழிபட வருபவர்கள் முன்கூட்டியே இணையம் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். வழிபாடு நடக்கும் கட்டடத்துக்குள் நுழையுமுன் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

    வழிபாட்டுக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுபவர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக விதிகளை கடைபிடித்து அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  5. நெதர்லாந்தில் விலங்குகளுக்கு கொரோனா

    நெதர்லாந்தில் 'மின்க்' எனப்படும் மென்மயிர் தோல் கொண்ட விலங்குகளை வளர்க்கும் இரண்டு பண்ணைகள் தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளன. சுவாசக் கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை அந்த விலங்குகள் காட்டியதாக நெதர்லாந்து வேளாண்மை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மென்மையான ரோமங்களை உடைய இந்த விலங்குகள், அவற்றின் ரோமங்களை கொண்டு ஆடைகள் தயாரிப்பதற்காக பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

  6. அறிவும் அன்பும் பாடல் உருவானது எப்படி?, இசையமைப்பாளர் ஜிப்ரான் நேர்காணல்

  7. 25 லட்சத்திற்கு சொத்தை விற்று ஏழைகளுக்கு உதவிய பாட்ஷா சகோதரர்கள்

    “சாதி, மத, இனப்பாகுபாடு பார்க்காமல் உதவ வேண்டும். மதம் என்பது இங்குதான் உள்ளது. அது நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. கடவுளிடம் மதம் இல்லை.” என்று கூறும் இந்த பாட்ஷா சகோதரர்கள் தங்கள் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்று ஏழைகளுக்கு உதவி இருக்கிறார்கள்.

  8. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020ஆக உயர்வு

    தமிழகத்தில் இன்று புதிதாக 64 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தாக்கத்தால் இன்று ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இன்று(ஏப்ரல் 26) 60 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020ஐ தொட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 13 நபர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 12 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.இதுவரை 87,605 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இன்று(ஏப்ரல் 26)7,495 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டுவரும் மத்திய அரசின் குழுவினர், அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் சென்னை நகரத்தின் பல்வேறு பொது இடங்களை பார்வையிட்டனர்.

  9. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று

    தென்னமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த 17 காவல்துறையினர் கோவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

    காவல்துறையினருக்கு முகக் கவசங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவில்லை என்று விமர்சனத்திற்கு உள்ளான அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் கார்லஸ் மார்கன் வெள்ளியன்று பதவி விலகியுள்ளார்.

    பெருவில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் கோவிட்- 19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 3.2 கோடி மக்கள்தொகை கொண்ட பெருவில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

  10. இந்தியாவின் தற்போதைய நிலவரம்

    இந்தியாவில் ஞாயிற்றுகிழமை மாலை 5 மணி நிலவரப்படி 26917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 20177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா முழுவதும் 5,913 பேர் குணமடைந்துள்ளனர். 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 3071 பேரும் டெல்லியில் 2625 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  11. தமிழக அரசு அறிவிப்பு

    கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கை தடுப்பவர் அல்லது தடுக்க முற்படுபவருக்கு ஒன்றிலிருந்து மூன்றாண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

  12. மேற்கு வங்க அரசு மருத்துவர் பலி

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்ட மேற்குவங்க மாநில மூத்த அரசு மருத்துவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பிப்லப் காண்டி தாஸ்குப்தா மேற்கு வங்க மருத்துவ சேவையின் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பலியாவது இதுவே முதல் முறை இவரது மரணத்துக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  13. பாதிக்கப்பட்டவர்களில் 80 % பேர் தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தவர்கள்- மகாராஷ்டிரா மாநில முதல்வர்

    மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருப்பதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கோவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சுமார் நான்கில் ஒரு பங்கினர் மகாராஷ்டிராவில் உள்ளனர். இந்தியா முழுவதும் 26 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 4 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் உள்ளனர்.

  14. பாராட்டு பெறும் ஜெர்மனி

    கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் ஜெர்மனி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் பொது சுகாதார முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி ஜெர்மனியில் கோவிட்- 19 தொற்றின் காரணமாக சுமார் 5,500 பேர் இறந்துள்ளனர்.

    20,000 பேருக்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்துள்ள அமெரிக்கா , பிரான்ஸ் இத்தாலி, ஸ்பெயின், மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விடவும் இது மிகவும் குறைவான எண்ணிக்கை.

    இதற்கு காரணம் ஓரளவு அதிர்ஷ்டம் என்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதிகமான படுக்கைகளை வைத்துக்கொள்ளலாம் என்று தங்கள் அரசு எடுத்த முடிவு என்றும் ஜெர்மனியின் வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரூஸ் மைக்கேலிஸ் கூறியுள்ளார்.

    தங்கள் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 40,000 படுக்கைகள் இருப்பதாகவும் அவற்றில் 30,000 படுக்கைகளில் செயற்கை சுவாச கருவிகள் வென்டிலேட்டர் பயன்படுத்தும் வசதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  15. தீவிரமான அணுகுமுறையை கையாளவில்லையா ஸ்வீடன்

    ஊரடங்கு அமல் படுத்துவதில் பிற நாடுகளை காட்டிலும் சற்று தளர்வான அணுகுமுறையை ஸ்வீடன் கொண்டுள்ளது. பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோவின் "பெருந்தொற்று என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றது. இது குறுகிய தூர ஓட்டம் அல்ல," என்றார்.

    கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் ஸ்வீடன் தீவிரமான அணுகுமுறைகளை கையாளவில்லை என்று கூறப்படுவது மிகப்பெரிய மூடநம்பிக்கை என்றார் அவர்.

    50 பேருக்கும் அதிகமானவர்கள் கூடுவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. பிற ஸ்கேன்டினேவிய நாடுகளைவிட ஸ்வீடன் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அந்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஆனால் அதன் அண்டை நாடான நார்வேயில் 193 பேர் மட்டுமே இறந்துள்ளனர்

  16. வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனரா?

    கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய இடமாகக் கருதப்படும் சீனாவின் வுகான் நகரத்தில் கோவிட்- 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து விட்டனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மி ஃபெங் கோவிட்- 19 தொற்றின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கடைசி நோயாளி வெள்ளியன்று குணமடைந்து விட்டார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அங்கு புதிதாக தொற்று உண்டானவர்கள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. டிசம்பர் மாதம் சீனாவில் வைரஸ் பரவல் தொடங்கிய பின்பு நாடு முழுவதும் 82 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்தனர். சீனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களில் வுகான் நகரில் மட்டும் 46 ஆயிரத்து 452 பேர் பாதிக்கப்பட்டனர். இது நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 56% ஆகும்.

  17. சௌதி அரேபியாவில் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக விதித்திருந்த ஊரடங்கு விதிகளில் சிலவற்றை சௌதி அரேபியா ஞாயிற்றுக்கிழமையன்று விலக்கியுள்ளது.

    24 மணி நேரமும் அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே நடமாட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வரும் புதன்கிழமை முதல் அங்கு கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். அன்று முதல் சில தொழிற்சாலைகளும் இயங்கலாம். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    எனினும் உடற்பயிற்சி கூடங்கள் உணவகங்கள் போன்ற சமூக விலகளை கடைபிடிக்க முடியாத இடங்களில் இந்த விதி விலக்குகள் கிடையாது.

    இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவில் இந்த ஊரடங்கு தளர்த்தப் பட்ட விதிகள் அமல் ஆகாது.

    அந்த நகரங்களில் தொடர்ந்து ஊரடங்கின் கீழ் இருக்கும். சௌதியில் இதுவரை 16000க்கும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் இறந்துள்ளனர்

  18. போரிஸ் ஜான்சன் : திங்கள் முதல் மீண்டும் அலுவலக பணிகளை மேற்கொள்வார்

    திங்கள்கிழமை காலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அலுவலக பணிகளுக்கு மீண்டும் திரும்புகிறார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போரிஸ் ஜான்சன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    தனது அலுவலக பணிகளை தொடர்வது குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் மற்றும் வேந்தர் ரிஷி சுனிக் ஆலோசனை நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூன்று மணிநேர ஆலோசனையில் ஈடுபட்டார்.

    "மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாம் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை" என்று பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார்.

  19. புதிய சிக்கலை உலகம் தாங்குமா? Asymptomatic Corona Virus - Explained

    கொரோனா பிரச்சனை முடிந்து எப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்புவது என மக்கள் கலங்கும் நிலையில் கொரோனா விவகாரத்தில் Asymtomatic எனும் புதிய சிக்கல் குடைச்சலைக் கொடுக்கத் துவங்கியுள்ளது.

    அது என்ன Asymtomatic? - விரிவான விளக்கம்.

  20. ஸ்பெயினில் 1 மணிநேரம் மட்டும் குழந்தைகள் வெளியில் வரலாம்

    ஸ்பெயினில் தளர்த்தப்பட்ட புதிய ஊரடங்கு விதிகளின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வெளியில் செல்லலாம். காலை 9 மணியில் இருந்து மாலை 9 மணிக்குள் ஒரே ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டவோ, ஸ்கேட்டிங் செய்யவோ அனுமதிக்கப்படுவார்கள். எந்த விளையாட்டாக இருந்தாலும் 1 கிலோமீட்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மே மாதம் மூன்றாம் வாரம் வரை இவ்வாறான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.