கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கோவிட் -19 பாதிப்பு 1520-ஆக அதிகரிப்பு - இந்தியாவில் அண்மைய செய்திகள் என்ன?

இந்தியாவில் மொத்தம் 17,615 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 559 பேர் உயிரிழந்துள்ளனர். 2,854 பேர் குணமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

    ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

    பட மூலாதாரம், Getty Images

    உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு நிறுவனமான டிஸ்னி கொரோனாதொற்று காரணமாக உலகம் முழுவதும் முடக்கத்தில் இருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளத்தை நிறுத்தியது.

    டிஸ்னி நிறுவனம் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியாவில் விடுதிகளையும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

    சம்பளம் தரப்படாத பணியாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதாகவும் அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்க அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

  2. கொரோனா வைரஸ்: சீனாவின் நிலை என்ன ?

    கொரோனா வைரஸ்: சீனாவின் நிலை என்ன ?

    பட மூலாதாரம், Getty Images

    ஆசிய நாடுகளை பொறுத்தவரை சீனாவில் நேற்று புதிதாக 12 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.

    ஏற்கனவே ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்து வரும் சீனா, தற்போது அந்நாட்டில் உள்ள சீன பெருஞ்சுவர் உள்ளிட்ட 73 முக்கிய சுற்றுலா தளங்களை மீண்டும் திறந்துள்ளது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக 30 சதவிகித சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த இடங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது.

    தென்கொரியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வந்தாலும், அந்நாட்டில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது அடுத்த 15 நாட்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வகையில் சில விளையாட்டு போட்டிகளுக்கும், கிறிஸ்துவ தேவாலயங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று வெறும் 13 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நிலவரம் என்ன?

    ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, அந்நாட்டின் சிட்னி நகரில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அந்நகரில் உள்ள மூன்று கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த கடற்கரைகளில் நீர்ச்சறுக்கு விளையாடுபவர்களையும், உடற்பயிற்சி செய்பவர்களையும் பார்க்க முடிகிறது.

    அந்நாட்டின் மூன்று பெரிய மாகாணங்களான நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயீன்ஸ்லாண்ட் ஆகியவற்றைக் கடந்த 80 நாட்களுக்குப் பிறகு எந்த புதிய கொரோனா தொற்றும் பதிவாகவில்லை. இருப்பினும் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் அடுத்த நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

    இதே போல கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துவருவதைத் தொடர்ந்து, அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்துவது குறித்து அந்நாட்டு அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

  4. கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வாகுமா?, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?

    கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வாகுமா?

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

    முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.

  5. கொரோனா: இந்தியாவின் நிலை என்ன?

    இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 13,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 2301 பேர் குணமடைந்துள்ளனர். 519 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒருவர் இடம்பெயர்ந்துள்ளார்.

    இந்தியாவில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 3651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 1893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  6. அமெரிக்கா: டிரம்ப் Vs மாகாண ஆளுநர்கள் - உச்சத்தில் மோதல்

    Trump

    பட மூலாதாரம், Getty Images

    உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,65,000ஐ தாண்டியுள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது. இது உலக அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதமாகும்.

    இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில், வைரஸ் தொற்றின் தீவிரம் உச்சத்தைக் கடந்துவிட்டதைப் போல தெரிவதாக அந்த மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்த வேண்டும் எனக்கோரி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதை தொடர்ந்து அவருக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அதிபர் ஆதரவளித்துப் பேசி வருவது, மிகவும் அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என வாஷிங்டன் ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார்.

  7. கொரோனா வைரஸ்: சரியான காரணங்களுக்காக விஷ்வ குருவாக மாறுவோம் - கமல் ஹாசன் அறிக்கை

    கொரோனா வைரஸ்: சரியான காரணங்களுக்காக விஷ்வ குருவாக மாறுவோம் - கமல் ஹாசன் அறிக்கை

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாவுக்கு பிறகு இந்தியாவைப் புனரமைத்தல் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் பொருளாதாரத்தில் 77 சதவீத சொத்துகள், 10 சதவீத மக்களின் கையில் உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அது பெரும்பணக்காரர்களுன் சொத்துகளைப் பறித்து சரி செய்யப்படக் கூடாது. அடித்தட்டில் இருக்கும் மக்களின் பொருளாதார நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தினால் வலுப்படுத்தி அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவதால் மட்டுமே சரி செய்யப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. முஸ்லிம்கள் ரமலான் நோன்பு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை

    "கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த நேரத்தில், முஸ்லிம்கள் ரமலான் நோன்பு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை" - இரானின் அதியுயர் தலைவர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன? உலகளவில் கொரோனா வைரஸின் நிலை என்ன?

  9. இந்தியாவில் ரயில், விமானம் சேவை மீண்டும் எப்போது? விரிவான தகவல்கள்

    இந்தியாவில் ரயில், விமானம் சேவை மீண்டும் எப்போது?  விரிவான தகவல்கள்

    பட மூலாதாரம், Getty Images

    ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளார்.

    உள்நாட்டில் மே 4-ஆம் தேதி முதலும், வெளிநாடுகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதலும் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணம் மேற்கொள்வதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளை தொடங்கிவிட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறி உள்ளார்.

    கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் விமான, ரயில் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பிடிஐ செய்தி முகமைக்கு அளித்துள்ளா பேட்டியில் அமைச்சா் ஜாவடேகா், “ரயில், விமான சேவையை எப்போது தொடங்குவதென மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏனெனில், இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்களைக் கற்று வருகிறோம். அதன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” என்றார்

    விமான சேவை தொடா்பாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங்கும் விளக்கமளித்துள்ளார்.

    இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றுதான் அவரும் கூறியுள்ளாா்.

    அரசு முடிவெடுத்த பிறகுதான் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவைத் தொடங்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் ஜாவடேகா்.

  10. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள், சமூக ஊடகத்தை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள்

    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள்

    பட மூலாதாரம், SPB

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

    அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

    குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனா தொடர்பாக உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடல்களுள் சிலவற்றை பார்க்கலாம்.

  11. கொரோனா ஊரடங்கு: குடும்ப வன்முறைக்கு ஆளாகும் இந்தியப் பெண்கள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

    காணொளிக் குறிப்பு, கொரோனா ஊரடங்கு: குடும்ப வன்முறைக்கு ஆளாகும் இந்தியப் பெண்கள்
  12. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே, ஏப்ரல் 19 பிபிசி தமிழில் வெளியான செய்திகள்

    வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே

    பட மூலாதாரம், Getty Images

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    ஏப்ரல் 19 பிபிசி தமிழில் வெளியான செய்திகள்

    பிரிட்டன்: பிரிட்டனில் கொரோனாவைரஸால்உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இரான்: இரானில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. அங்கு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

    ரஷ்யா: வழக்கமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈஸ்டர் தின பிரார்த்தனை கூட்டத்தில் மூத்த பாதிரியருடன் கலந்துகொள்வார். மாறாக, இந்த முறை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில்,அனைத்து விஷயங்களும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இந்தியா: இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது.