கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க வேண்டும். இதன் உச்சகட்ட நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 4ஆம் தேதியும் தேரோட்டம் மே ஐந்தாம் தேதியும் நடக்க வேண்டும்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகிய எந்த நிகழ்வும் நடக்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கல்யாண நிகழ்வு மட்டும் மே நான்காம் தேதியன்று காலை 9 மணியிலிருந்து 9.29க்குள் சுவாமி சன்னிதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு கோவிலின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாண தருணத்தில் பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை மாற்றும் மரபு உள்ளது. அப்படிச் செய்ய விரும்பும் பெண்கள் மேலே குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிலேயே அதைச் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவின் மற்றொரு பகுதியான ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் மூலம் நடத்தப்படும். அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மற்றும் மாசி மாதங்களில் நடந்துவந்தன. மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மாதத்தில் நடக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.