எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் (ஒபெக்) உள்ள நாடுகளும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை பத்து சதவீதம் அளவுக்குக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நுகர்வு குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடந்த கூட்டத்தில் இந்த முடிவிற்கு வர எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
ஒபெக் இப்படியான முடிவிற்கு ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறை. ரஷ்யாவுடன் கூட்டணியில் இருக்கும் பிற எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக் +) இந்த ஒப்பந்தத்திற்கான திட்டத்தை ஏப்ரல் 9 முன் வைத்தது.
ஆனால், மெக்சிகோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியான சூழலில் இந்த முடிவு இப்போது எட்டப்பட்டிருக்கிறது.
9.7 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி இதன் காரணமாக குறையும்.
இன்னும் இது ஒபெக்கால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ட்ரம்ப் மற்றும் குவைத் அமைச்சர் இது தொடர்பாக ட்வீட் பகிர்ந்துள்ளனர். செளதி மற்றும் ரஷ்யா இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இத்தாலி மற்றும் பிரான்சில் என்ன நடக்கிறது?
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட இரு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் பிரான்சில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 431 என்ற அளவில் உள்ளது. இது கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைவு.
பிரான்சில் 315 பேர் ஞாயிற்றுக்கிழமை பலியானதாக பதிவாகி உள்ளது.சனிக்கிழமை அங்கு பலி எண்ணிக்கை 345ஆக இருந்தது.