You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: 15 லட்சத்தை கடந்தது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல் மாநிலம் ஒடிஷா.

    ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

    ஒடிஷாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. பிரிட்டனின் நிலை என்ன?

    பிரிட்டனில் புதன்கிழமை அன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகின.

    புதனன்று மட்டும் 938 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,097ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐந்தாம் நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. 'உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கும்'

    கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகில் ஏழ்மை நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

    கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என அந்த அறிக்கை கூறுகிறது.

  4. இலங்கையில் 19,441 பேர் கைது

    இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 19,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 20ம் தேதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

    அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊடரங்கு சட்டத்தை மீறிய 1742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  5. கொரோனா உங்கள் உடலுக்குள் சென்றால் என்ன செய்யும்?

    கொரோனா நுரையீரலை எப்படி தாக்குகிறது? எப்படி வைரஸ் நமது உடலை பாதிக்கிறது? எப்படி இருமல் வருகிறது? ஏன் காய்ச்சல் ஏற்படுகிறது?

  6. மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி

    இந்தியர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் அதில், “அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்கள் வலுவான தலைமைக்கு நன்றி, பிரதமர் நரேந்திர மோதி” என்று பதிவிட்டுள்ளார்.

  7. சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 156ஆக அதிகரிப்பு

  8. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் - இத்தாலி பிரதமர்

    இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.

    அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

    "விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்" என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார்.

    இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.

    அதேபோல இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் 919இல் இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 542ஆக குறைந்துள்ளது.

    எனினும் எச்சரிக்கையாக இருக்கப்போவதாகவும், கட்டுப்பாடுகளை படிப்படியாகவே குறைக்க உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

    இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதால், தீவிர சிகிச்சை பிரிவின் மீது இருக்கும் அழுத்தமும் குறைகிறது. இதுவரை அங்கு குறைந்தது 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

  9. ஆசியாவில் கொரோனா வைரஸ் - சமீபத்திய நிலவரங்கள்

    ஜப்பானில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, ஒரு நாளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட அந்நாட்டின் பல பெரு நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கி தென் கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 53ஆக இருக்க, நேற்று 39ஆக குறைந்நதது.

    சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தனது பதவியை ராஜினாமா செய்திருந்த கிழக்கு தைமூர் பிரதமர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் நோக்கில் அதனை திரும்பப் பெற்றுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தவறியதை அடுத்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருந்தார்

  10. நியூயார்க்கின் நிலை என்ன?

    அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயார்க்கில் நேற்று ஒரே நாளில் 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்கில் மட்டும் 1,50,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ உத்தரவிட்டுள்ளார்.

    "உயிரிழப்பவரின் எண்ணிக்கையில் ஒவ்வொரு எண்ணும் ஒருவரது முகம். பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களையே இந்த வைரஸ் அதிகம் தாக்கியுள்ளது. அவர்களை பாதுகாப்பது நம் கடமை" என்று அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறிய ஆளுநர், எனினும் வரும் நாட்களில் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளார்.

  11. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை தேடி வரும் போலீசார்

    விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என கருதி நேற்று அனுப்பப்பட்ட இளைஞருக்கு நேற்று (மார்ச் 8) கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதால், காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    டெல்லியைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர் கடந்த மாதம் ஒரு வழக்கில் புதுவை காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர், புதுவை மத்தியச் சிறையிலிருந்து கடந்த மாதம் 16ஆம் தேதி விடுதலையாகியுள்ளார். அதன் பிறகு, புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் சுற்றித்திரிந்த இவர் ஊரடங்கு உத்தரவால் விழுப்புரம் பகுதியில் தங்கியிருக்கிறார்.

    தொலைபேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது.

    செவ்வாய்க்கிழமை மாலை அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என கருதி மருத்துவமனையிலிருந்து அவரை அனுப்பிவிட்டனர்.

    இந்நிலையில், கொரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு, இன்று கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை தற்போது காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

  12. கொரோனாவால் இறந்தால் புதைக்க கூடாதா?

    கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலை புதைக்க கூடாதா? விதிமுறைகள் என்ன?

  13. 'அரசியலாக்க வேண்டாம்'

    கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

  14. அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2000 பேர் மரணம்

    அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2000 மரணங்கள் பதிவாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

    ஒரே நாளில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ள எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    நேற்று முன்தினம் 1,939 பேர் இறந்ததாகவும், நேற்று ஒரே நாளில் 1,973 பேர் இறந்ததாகவும் ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 4,31,838 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,695 பேர் உயிரிழந்துள்ளனர்.

  15. இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734ஆக உயர்ந்துள்ளது என ஏ.என்.ஐ செய்து முகமை தெரிவிக்கிறது.

    இறந்தவர்களின் எண்ணிக்கையும் 149இல் இருந்து அதிகரித்து 166 ஆகியுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளான 473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  16. பூர்வகுடி மக்களிடையே கொரோனா வைரஸ்

    பிரேசிலில் உள்ள யானோமாமி பூர்வகுடி சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இது அந்த அமேசான் மழைக் காட்டில் வசிக்கும் சமூகத்தினரிடையே பதிவாகியுள்ள முதல் கோவிட்-19 தொற்றாகும். பாதிக்கப்பட்டுள்ள 15 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெளியுலகத் தொடர்பில்லாமல், அமேசான் காட்டின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் இந்த சமூகத்தினர் அவர்களுக்கு அந்நியமான நோய்களை எதிர்க்கும் திறனை மிகமிகக் குறைவாகவே கொண்டுள்ளனர்.

    பிரேசிலில் அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

    சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் பிரேசிலில் வசிக்கின்றனர்.

    கொகாமா எனும் பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது உறுதியானது.

    பிரேசிலில் இதுவரை சுமார் 14,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

  17. கொரோனா மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன?

    நோய் மற்றும் அச்சம் குறித்த தகவல்கள் காரணமாக நாம் மரபுகளை அதிகம் நம்பத் தொடங்கி இருக்கிறோம், இயற்கைக்கு முரணான நிலை குறைந்து வருகிறது.

  18. 'சர்வதேச வர்த்தகம் வீழும்'

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வணிகம் 2008ஆம் ஆண்டைவிட பெரிய சரிவை சந்திக்கும் என்று உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலக வர்த்தகம் 13% முதல் 32% வரை வீழும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

    கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கம் எப்போது முடியும் என்பது குறித்த தெளிவான முடிவு எதுவும் இல்லாததால் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

  19. பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது

    கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 15 லட்சத்தை கடந்துள்ளது.

    இந்திய மற்றும் இலங்கை நேரப்படி வியாழன் காலை 5.40 மணி நிலவரப்படி 15,13,358 பேர் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  20. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.