எந்தெந்த நாடு என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அயர்லாந்தில் இரண்டு வாரத்திற்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
ரஷ்யாவில் ஊதியத்துடன் சேர்த்து ஒரு வாரத்திற்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பார், உணவு விடுதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யப்படாத கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற குழப்பம் அங்கு நிலவுகிறது.
ஐரோப்பாவின் மால்ட்டா நாட்டில் 65 வயதை கடந்த முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், தீவிரமான உடல்நல பிரச்சனைகள் உள்ள நபர்கள் வீட்டை விட்டு வெளியேவர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி மக்கள் தங்கள் அலுவலகப் பணிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வரலாம்.
ஆனால் மக்கள் பெரிய குழுக்களாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பாக இயங்கும் ஐரோப்பாவின் ஃபின்லாந்தில் உள்ள உசிமா மாகாணத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் உசிமா மாகாணம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்படுகின்றனர்.