மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: வாக்கு எண்ணிக்கை நிலவரம் - நேரலை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம், முக்கிய நிகழ்வுகள், வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள், அதிக இடங்களை பெற்ற கட்சி உள்ளிட்ட தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.

முக்கிய சாராம்சம்

  • பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக பதவி விலக வேண்டும் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
  • தேர்தல் முடிவுகள் மோதியின் தார்மீக மற்றும் அரசியல் ரீதியான தோல்வி என, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
  • தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் மக்கள், பழங்குடியினர் இந்த நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றியுள்ளனர் என்றார், ராகுல் காந்தி.
  • காலை 10.30 மணி நிலவரப்படி, டேட்டா நெட் வழங்கியுள்ள தகவலின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 299 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவதால், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
  • இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
  • தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
  • நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில் 272 இடங்களைப் பிடிக்கும் அணி ஆட்சியமைக்கும்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பாஜக கூட்டணி எத்தனை இடங்களில் முன்னிலை?

    பாஜக

    பட மூலாதாரம், ANI

    காலை 10.30 மணி நிலவரப்படி, டேட்டா நெட் வழங்கியுள்ள தகவலின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 299 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசின் ‘இந்தியா’ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 43 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பிகாரில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

    மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியில் 17 இடங்களிலும் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, 542 தொகுதிகளில் 457 தொகுதிகளுக்கான ஆரம்பகட்ட முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. அதில், பாஜக 209 இடங்களிலும் காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    சமாஜ்வாதி கட்சி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் 80 இடங்களில் 79 தொகுதிகளுக்கான முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. இவற்றில், பாஜக 40 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் பாஜக 25 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

  2. வாரணாசி தொகுதியில் மோதி முன்னிலை

    நரேந்திர மோதி

    பட மூலாதாரம், EPA

    பிரதமர் மோதி போட்டியிட்ட உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் தற்போது முன்னிலையில் உள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி 21,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில், பிரதமர் மோதி சுமார் 5,000 வாக்குகள்வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்-ஐ விட பின்னடைவில் இருந்தார்.

  3. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை

    சௌமியா அன்புமணி
    படக்குறிப்பு, சௌமியா அன்புமணி

    மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    தருமபுரி மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஆ.மணி போட்டியிட்டார். அ.தி.மு.க-வின் சார்பில் அக்கட்சியின் தருமபுரி நகரச் செயலாளர் ரவியின் மகன் அசோக் போட்டியிட்டார்.

    2019 தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வியடைந்தார்.

  4. இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு

    இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு

    பட மூலாதாரம், Getty Images

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவதால், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்செக்ஸ் 2,126 புள்ளிகள் சரிந்து, 74,342.55 என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. நிஃப்டி 698 புள்ளிகள் சரிந்துள்ளது.

    முன்னதாக மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 3) காலை பங்குச் சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் சுமார் 2,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் முடிவில் சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது.

    நிஃப்டி ப்ரீ- ஓப்பனிங்கில் (pre-opening) சுமார் 1,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் இறுதியில் சுமார் 700 புள்ளிகள் ஏற்றத்தில் முடித்தது.

  5. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி பின்னடைவு

    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி பின்னடைவு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பிரதமர் மோதி போட்டியிட்ட உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் அவர் பின்னடைவில் உள்ளார்.

    தேர்தல் ஆணையத்தில் உள்ள தகவலின்படி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோதி 5,257 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 11,480 வாக்குகள் பெற்றுள்ளார். அதன்படி, மோதி 6,223 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

  6. மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: பாஜக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: பாஜக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை

    பட மூலாதாரம், ANI

    18-ம் மக்களவை தேர்தலுக்கான ஆரம்பகட்ட முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. டேட்டா நெட் (Data Net) வழங்கியுள்ள தகவல்களின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 257 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    அதேநேரத்தில், காங்கிரசின் ‘இந்தியா’ கூட்டணி 165 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 அன்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1 அன்றும் நடைபெற்றது.

    இன்று, செவ்வாய்கிழமை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை. மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே தான் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

  8. வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்க வேண்டும், அதில் தபால் வாக்குகள் எப்படி எண்ணப்பட வேண்டும், இவிஎம் வாக்குகள் எப்படி எண்ணப்பட வேண்டும், முடிவுகளை எப்படி அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய கையேட்டில் வழிகாட்டப்பட்டுள்ளது.

    • தேர்தல் நடத்தை விதி 1961, விதி 54A இன்படி, முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் தொடங்கப்பட வேண்டும்.
    • குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பு தேர்தல் அதிகாரியால் பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
    • வாக்கு எண்ணிக்கை மேஜையில் இருக்கும் பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டும். வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை செயல்முறையை விளக்க வேண்டும்.
    • ஒவ்வொரு வாக்காகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த பிரதிநிதிக்கு வழங்கப்படும். அதன் முடிவுகள் படிவம் 20இல் உள்ளீடு செய்யப்பட்டு, அங்குள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படும்.
    • தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய 30 நிமிடங்கள் கழித்து இவிஎம் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் ஏதும் இல்லையென்றால், நேரடியாக இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.
    • தபால் வாக்கு எண்ணிக்கை முடியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும்கூட, இவிஎம் வாக்கு எண்ணிக்கையில் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடக்கும்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான தபால் வாக்குகள் மற்றும் இவிஎம் வாக்குகளை இறுதி முடிவுகளுக்கான படிவத்தில் நிரப்பி, முறையாகப் பரிசோதனை செய்த பிறகு தேர்தல் அதிகாரி இறுதி முடிவை அறிவிக்கலாம்.
  9. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்

    ராகுல் மோதி

    அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.

  10. நேயர்களுக்கு வணக்கம்!

    இந்திய மக்களவைத் தேர்தல் தொடர்பான பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்.