மதுரை சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் குன்றிய இளம்பெண் தனது 3 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மூலமாக ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் 3வது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நரிமேடு நகர்புற சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலருக்கு தொண்டு நிறுவனத்தினர் தகவல் அளித்தனர்.
மேலும் கொரோனா உறுதியானதால் அரசு கொரோனா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் தொடர்பான ஆவணம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை கொரோனா பாதிப்பால் குழந்தை மாணிக்கம் உயிரிழந்துள்ளது என்றும் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறி தத்தனேரி மயான ஆவணங்கள் மற்றும் புதைக்கப்பட்ட படத்தையும் சமூக ஆர்வலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை பார்த்த அசாருதீன் ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தை காணாமல் போனதாகவும் கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து நேற்றிரவு மாவட்ட குழந்தை நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசிது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே ரசிது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்தனர்.
அப்போது தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை ஜோடித்தது தெரியவந்துள்ளது.
போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனை மருத்துவர் ஆகிய இருவர் தரப்பில் தொண்டு நிறுவனத்தின் மீது மேலும் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் ஏடிசி கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடம் என்பது தெரியவந்தது.
இதனால் மாணிக்கம் என்ற குழந்தை புதைக்கப்படவில்லை எனவும் உறுதியாகியுள்ளது.
இதன் பின்னர் காப்பகத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது, கர்நாடக மாநிலத்தை சேர்த்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரிய வந்தது.
காப்பக பணியாளர்களிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையின் படி, மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெருவை சேர்ந்த 47 வயது நகைக்கடை உரிமையாளரிடம் ஜூன் 13 ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், 2 வயது பெண் குழந்தை கடந்த 16 ஆம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விறக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் கைது செய்துனர்.
பின்னர், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து பிபிசியிடம் அசாருதீன் கூறுகையில், "ஒரு குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதே போல வேறு ஏதும் குழந்தைகள் காணாமல் போயுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும்," என்றார் அவர்.
புகாருக்குள்ளான தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலிசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், "குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தனியார் காப்பகம் குறித்து விசாரணை நடைபெறுகிறது," என கூறினார்.