You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் அஜித் அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ்நாட்டின் திருச்சியில் நடைபெற்று வரும் 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி இதுவரை மொத்தம் நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.சிஎஃப்பி மாஸ்டர் ஆடவர் அணி நிகழ்வு, எஸ்டிடி பி மாஸ்டர் ஆடவர் குழு நிகழ்வு மற்றும் 50 மீட்டர் எஃப்பி மாஸ்டர் ஆடவர் அணி நிகழ்வு உட்பட நான்கு குழு நிகழ்வுகளில் அஜித் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.ஜூலை 24ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் மாஸ்டர் பிரிவில் நடிகர் அஜித் பங்கேற்று சுடுவது போன்ற படங்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வருகை தரும் காணொளிகள், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்ற162 நபர்களுக்கு ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நேற்று வழங்கினார்.
இதில், நடிகர் அஜித் குமாரின் அணி, சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆடவர் பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்க பதக்கமும், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகிய இரு பிரிவுகளில் வெண்கல பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
கடந்த ஆண்டு, சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் நடிகர் அஜித் ஆறு தங்க பதக்கங்களை வென்றிருந்தார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில், அஜித் குமாரின் வெற்றியை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கிடையே, அஜித் குமார் ரைஃபிள் கிளப் போட்டியில் பங்கேற்கும் தகவல் அறிந்து, அங்கு பல நூற்றுக்கணக்கில் அவரது ரசிகர்கள் திரண்டனர். இந்த காணொளியும் சமூக ஊடக பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
திரைத்துறை பணியை பொருத்தவரை, அஜித் தற்போது ஹெச். வினோத்துடன் இணைந்து #AK61 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் வங்கிக் கொள்ளையைச் சுற்றி நடப்பதாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
படத்தின் சில முக்கியமான காட்சிகள் ஹைதராபாதில் படமாக்கப்பட்டுள்ளன. அதில் சில காட்சிகளுக்கான செட், சென்னையின் பிரபல அடையாளமான அண்ணா சாலையை ஒத்ததாக உள்ளது. இந்த படத்தின் கடைசி ஷூட் இன்னும் முடிவடையவில்லை. படம் முடிந்ததும், அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்