BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் லீனா மணிமேகலையின் ஆவணப்படம் குறித்த சர்ச்சை, விவசாயிகள் புதிய போராட்டத் திட்டம், மகேந்திர சிங் தோனியை தமிழர்கள் கொண்டாடுவது, இந்தியாவில் சர்வீஸ் சார்ஜ் ரத்து, ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம், ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படம் சர்ச்சை

காளி படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் பெரும் சலசலப்பு மற்றும் லீனா மணிமேகலையை கைது செய்யும் கோரிக்கைகள் சமூக ஊடகங்களில் வலுத்து வருகின்றன.

காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழர்கள் தோனியை அதிகம் கொண்டாட காரணம் என்ன?

கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தோனிதான் சென்னையின் அடையாளம்.

தமிழ்நாட்டின் பட்டிதொட்டிதோறும் தோனியின் முகம் மிகப் பிரபலம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தோனி.

தமிழ்நாட்டில் தோனிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால், அதிலும் தனித்து தெரிபவர் சரவணன் ஹரி.

சாப்பிட்ட பிறகு சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்வது?

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு பில்லில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு (சிசிபிஏ) திங்களன்று தடை விதித்தது.

நீங்கள் ஒரு உணவகத்தில் உணவு சாப்பிடச் சென்றால், உணவகம் உணவுக்கான பணத்தையும், சேவைக் கட்டணத்தையும் உங்கள் பில்லில் சேர்த்தால், நீங்கள் சேவைக் கட்டணத்தை செலுத்த மறுக்கலாம் என்பது இதன் பொருள்.

மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார்

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் புதிய போராட்டங்களுக்கு தயாராக திட்டம்

2020இல் இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான கூட்டணி அரசு, வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் புதிய சட்டங்களை இயற்றியது. அதற்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகளில் பெண்களும் அடங்குவர்.

போராட்டக்காரர்கள் நகரின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்தனர். மழை, வெப்பம், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடுகள், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளையும் கடந்து போராட்டக் களத்திலேயே அவர்கள் உண்டு, உறங்கி தங்கியிருந்தனர். இத்துடன் கொரோனா பரவலும் விவசாயிகள் போராட்டத்துக்குத் தடையாக இருந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: