You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுமா? தீப்பந்தம் போல பிற மாநிலங்களை வாட்டும் வெப்பத்துக்கு இதுவா காரணம்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
இந்தியா முழுவதும் அடுத்த சில நாட்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடுமென இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை இவ்வளவு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?
இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் மத்தியப் பகுதிகளிலும் இந்த வாரம் வெப்ப நிலை 2 முதல் நான்கு டிகிரிவரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதற்குப் பிறகு பெரிய அளவில் வெப்ப நிலையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
"நாடு முழுவதும் வெப்பம் வெகுவாக அதிகரித்துவருகிறது. வழக்கமான காலத்திற்கு முன்பாகவே வெப்பம் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது" என புதன்கிழமையன்று முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் குறிப்பிட்டார்.
மே, ஜூன் மாதங்களில் இந்தியாவில் வெப்ப அலை வீசுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த ஆண்டு கோடைக் காலம் முன்கூட்டியே துவங்கிவிட்டதுதான் பிரச்சனை. மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மார்ச் மாதத்திலேயே வெப்ப அலையும் வீச ஆரம்பித்தது.
தற்போதைய வெப்ப அலைக்கு காரணம் என்ன?
இந்த ஆண்டில் முன்கூட்டியே வீச ஆரம்பித்த வெப்ப அலை, இமாச்சல பிரதேசம் போன்ற இதமான வெப்ப நிலைக்குப் பெயர்போன மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களை பாதித்திருப்பதாக தி சென்டர் ஃபார் சயின்ஸ் அன்ட் என்விரான்மென்ட் என்ற சிந்தனைக் குழு தெரிவித்திருக்கிறது.
இந்த வாரத்தில் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 44 டிகிரியைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான நரேஷ் குமார், தற்போதைய வெப்ப அலைக்கு உள்ளூர் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளே காரணம் என்கிறார். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைவாக இருந்ததால் வடமேற்கு இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதியிலும் பருவநிலைக்கு முன்பு சுத்தமாக மழையே இல்லாமல்போய்விட்டது. புயல்கள் உருவாவதற்கு எதிரான காற்றழுத்தத்தின் காரணமாகவும் வறண்ட, வெப்பக் காற்று மார்ச் மாதத்தில் மேற்கிந்தியப் பகுதியில் வீச ஆரம்பித்தது.
இந்த வெப்ப அலையின் விளைவுகள் வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்துள்ளன. வெப்பநிலை திடீரென அதிகரித்திருப்பது தங்களுடைய கோதுமை விளைச்சலைக் கடுமையாகப் பாதித்திருப்பதாக வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யுக்ரேன் போரினால் உலகம் முழுவதுமே கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படுவது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த வெப்ப அலையால் பல மாநிலங்களில் மின்சாரத்தின் தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாகவே கோடைக்காலம் என்பது மிக மோசமாகவே இருக்கும். குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தீவிரம் இருக்கும். இருந்தாலும் இப்போது ஏற்படும் வெப்ப அலைகள் மிக மிகத் தீவிரமானவையாகவும் அடிக்கடி நிகழக்கூடியவையாகவும் இருக்கின்றன. தவிர, இந்த வெப்ப அலைகள் நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது.
வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன
உள்ளூர் காலநிலை காரணிகளே தற்போதைய வெப்ப அலைக்குக் காரணம் என்று வலியுறுத்துகிறார் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மெடராலஜி நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியான ராக்ஸி மேத்யூ கோல். ஆனால், புவி வெப்பமயமாதலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வழக்கத்தைவிட மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வேலூர், திருச்சி, திருத்தணி, கரூர் பரமத்தி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளைவிட வெப்ப அதிகமாகவே பதிவாகிவருகிறது.
புவி வெப்பமயமாதல் இதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "வளைகுடா நீரோட்டம் எனப்படும் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆன்டி-சைக்ளோன் விளைவை ஏற்படுத்துகிறது. இதற்கு கிரீன்லாந்து பகுதியில் பனி உருகுவதுதான் முக்கியக் காரணமாக அமைகிறது" என்கிறார் அவர்.
வழக்கத்தைவிட 5 டிகிரி அதிகம்
பல மாநிலங்களில் வழக்கத்தைவிட ஐந்து டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள 36 வானிலைப் பிரிவுகளில் 17 பிரிவுகளில் வெப்ப அலை வீசுகிறது என்று கூறப்பட்டிருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார் அவர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் குளிர் அலை அதீதமாக வீசுவது குறைந்து, வெப்ப அலைகள் அதிகரித்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
மக்கள் தொகை அதிகரித்திருப்பதும் புவியின் வளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் நிலைமையை மேலும் மோசமாக்குவதாகக் கூறுகிறார் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கிளைமேட் சேஞ்ச் ஸ்டடீஸின் இயக்குனரான சிவானந்தா பய். காடுகளை அழிப்பது, அதிகமான போக்குவரத்து போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்.
"கான்க்ரீட் சாலைகளும் கட்டடங்களும் அதிகரிக்க அதிகரிக்க, வெப்பம் மேலே செல்வது தடுக்கப்பட்டு, புவிச் சூழல் கூடுதல் வெப்பமடைகிறது" என்கிறார் பய்.
இம்மாதிரி வெப்பம் அதிகரிக்கும்போது, இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
எந்த பாதுகாப்பும் இல்லை
"சூழலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் குறைவு" என்கிறார் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட்டின் மூத்த ஆய்வாளரான சாந்தினி சிங்.
வெப்ப அலைகளால் ஏற்படும் மரணங்கள் மட்டுமே பொதுவாக கவனிக்கப்படுகின்றன. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு அதனால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.
"வெப்ப அலைகளால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். இரவிலும் வெப்பம் கடுமையாக இருந்தால், நோய்களின் கடுமையும் அதிகரிக்கும். இதனால், மருத்துவச் செலவுகளும் கூடும்" என்கிறார் சாந்தினி.
பெரும்பாலான இந்தியர்களைப் பொறுத்தவரை, எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வெப்பதில் வேலைபார்க்கும் சூழல் இருக்கிறது. "கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தகரக் கொட்டகைகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறார்கள். கோடை காலத்தில் அது தாங்க முடியாததாக இருக்கும்" என்கிறார் ராக்ஸி மேத்யூ கோல்.
"நம்முடைய கட்டடங்களைப் பொறுத்தவரை, வெப்பத்தை வெளியேற்றுவதற்குப் பதிலாக உள்ளே பிடித்துக்கொள்ளும் வகையில்தான் கட்டப்படுகின்றன. சர்வதேச அளவில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகளில் இருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் சாந்தினி.
2015ஆம் ஆண்டிலிருந்து வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விடுத்துவருகின்றன. அதீத வெப்பம் நிலவும் காலங்களில் திறந்த வெளியில் வேலைசெய்யக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவது, நகரங்களை பசுமையாக்குவது போன்றவையில்லாமல் இந்த அறிவித்தல்களுக்கு எந்தப் பலனும் இருக்காது என்கிறார் சாந்தினி சிங்.
உலகம் முழுவதுமே தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை மனதில்கொண்டு, பருவநிலை மாற்றத்தை அணுகவேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்