You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கே.என்.நேரு Vs அண்ணாமலை: சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதன்படி 1,800 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களுக்கு நூறு சதவிகிதம் அளவுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. `மத்திய அரசின் நிபந்தனைகள் காரணமாகவே வரி உயர்த்தப்பட்டது' என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. உண்மையில் என்ன நடக்கிறது?
100% உயர்ந்த சொத்து வரி
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆகும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்' என நிபந்தனைகளை விதித்துள்ளது' என குறிப்பிட்டு விட்டு மத்திய அரசின் 'தூய்மை இந்தியா திட்டம்' மற்றும் அம்ரூட் 20 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், `பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, 600 ச.அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிர்பந்தமா?
அதேநேரம், இந்தியாவில் உள்ள பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகவும் குறைவானது என தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சனிக்கிழமையன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ` 15 ஆவது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதி விடுவிக்க முடியாது எனவும் திருத்தம் செய்யாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் 50 முதல் 100 சதவீதம் சொத்து வரி அதிகம். இந்த விவகாரத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் சீராய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.
இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ` சொத்து வரி உயர்வு என்பது ட்ரெய்லர்தான். இன்னும் அதிகமான பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன' என்றார். இதனை எதிர்த்து அ.தி.மு.க போராட்டத்தையும் அறிவித்துள்ளது. அதேநேரம், சொத்து வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் நேரு கூறியதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ` மத்திய அரசு கூறியதால்தான் வரியை உயர்த்தினோம் என அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு வழங்கிய ஆணையில் அவ்வாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப வரி விகிதாச்சார அளவுகளை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்சார்ந்த பகுதிகளைப் பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், `சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களைச் சந்திக்கத் துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய்யான புகாரை தெரிவித்து திசை திருப்ப முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசின் கபட நாடகத்தை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
15 ஆவது நிதிக் குழு பரிந்துரையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
`15 ஆவது நிதிக்குழுவின் 2021-26 ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகளின் சிறப்பியல்புகள்' என்ற உள்ளடக்கத்தில் தமிழ்நாடு அரசின் நிதித்துறையின் இணையத்தளத்தில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில், `உள்ளாட்சி அமைப்பு' என்ற பிரிவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியம் 2021-26 ஆம் ஆண்டுகளுக்கு ரூ.4,36,361 கோடியாக இருக்கும். மானியத்தின் அளவு மற்றும் அவை விடுவிக்கப்படும் காலம் ஆகியவற்றினை சரியாக கணிப்பதனை உறுதி செய்வதற்காக நிதிக்குழுவானது மானியத்தைப் பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியில் ஒரு பகுதியாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தொகையாக பரிந்துரைத்துள்ளது.
இந்த மொத்த மானியத்தில் ரூ.8,000 கோடியானது புதிய நகரங்களைத் தோற்றுவிப்பதற்கான செயல் திறன் அடிப்படையிலான மானியமாகவும் ரூ.450 கோடியானது பகிரப்பட்ட நகராட்சி சேவைகளுக்கான மானியமாகவும் இருக்கும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,36,805 கோடியும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,21,055 கோடியும் உள்ளாட்சி அமைப்புகள் வழியாக சுகாதார மானியமாக ரூ.70,051 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனை என்ன?
அதேநேரம், இதன் 25ஆவது பத்தியில், `மாநில நிதி ஆணையம் அமைத்திடாத மாநிலங்கள் அதனை அமைத்திடவும் அவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அப்பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விளக்கக் குறிப்பினை மார்ச் 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாநில சட்டமன்றத்தின் முன் வைத்திடவும் நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. மாநில நிதி ஆணையம் தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விதிகள் மற்றும் மேற்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மார்ச் 2024க்குப் பிறகு எவ்வித மானியங்களும் விடுவிக்கப்படாது. 2024-25 ஆம் ஆண்டுக்கான மானியங்களின் பங்கினை விடுவிப்பதற்கு முன்னர் மாநிலத்தால் அனைத்து அரசியலமைப்பு விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது குறித்து ஊராட்சி மன்ற அமைச்சகம் சான்றளித்தல் அவசியமாகும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், `ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான மானியத்தினைப் பெறுவதற்கான நுழைவு நிலை நிபந்தனைகளாவன; அவற்றின் தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை இணையத்தளத்தில் பொது களத்தில் வைத்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை இணையத்தளத்தில் வைத்திருக்கும் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை மட்டுமே மாநிலங்கள் பெறத் தகுதியுடையதாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் 27 ஆவது பத்தியில், `நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை இணையத்தளத்தின் பொதுக்களத்தில் வைத்திருக்க வேண்டும் என்கின்ற நுழைவு நிலை நிபந்தனையுடன் 2021-22க்குப் பிறகு தொடர்புடைய மாநிலத்தால் சொத்துவரி விகிதத்துக்கான குறைந்தபட்ச தளம் நிர்ணயம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் சொந்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் வளர்ச்சியினை ஒத்து சொத்துவரி வசூல் நிலையாக உயர வேண்டும் என்பது கூடுதல் கட்டாய முன்நிபந்தனையாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க சொல்வது என்ன?
மத்திய அரசின் 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையில் கூறப்பட்டதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக தி.மு.க கூறுகிறது. அதையேதான், நிதிக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையிலும் காண முடிகிறது. இதுதொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம்.
``மும்பையை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைவாக இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிடுகிறார். மும்பையில் 500 சதுர அடி வரையில் சொத்து வரி என்பதே கிடையாது. அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. டெல்லியில் ஒரு சில மாநகராட்சிகளில் 550 சதுர அடி வரையில் விலக்கு இருக்கிறது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும், `கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள் தீரும் வரையில் சொத்து வரி அமல்படுத்தப்படாது' எனக் கூறியிருந்தனர். பிறகு ஏன் உயர்த்த வேண்டும்?'' என அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், ``முந்தைய காலங்களில் சொத்து வரி உயர்த்தியபோது, `சொத்து வரி விதிப்பா.. சொத்துப் பறிப்பு வரியா?' என தி.மு.க கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, இந்த சொத்து வரி உயர்வு என்பது முதல்வரின் கவனத்துக்கே சென்றிருக்காது என்கிறார். அப்படியானால் முதல்வரின் கவனத்துக்கே தெரியாமல்தான் நிர்வாகம் நடக்கிறதா?'' என்கிறார்.
15ஆவது நிதிக்குழு அறிக்கையில் உள்ள விவரங்களை தி.மு.க முன்வைப்பது குறித்துக் கேட்டபோது, ``தமிழ்நாட்டின் சொத்து வரியில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. 15 ஆவது நிதிக்குழுவின் அறிக்கையின்படி, `அடிப்படையான வரிகளை வசூலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது. இதைச் செய்தால்தான் பணம் கொடுப்போம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மத்திய அரசு நிர்பந்தம் கொடுத்ததாகக் கூறியவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். மழைநீர் வடிகால், சி.எம்.டி.ஏ போன்றவற்றில் ஊழல் செய்யாமல் இருந்தாலே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். அதனை இவர்கள் செய்வார்களா?'' என்கிறார்.
பா.ஜ.கவின் விமர்சனம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், `` 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையில், `மானிய சலுகைகளை வழங்க வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்தினால்தான் வழங்குவோம்' எனக் கூறிவிட்டனர். இதன் காரணமாகத்தான் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் மிரட்டல்களில் இதுவும் ஒன்று. ஆனாலும், வசதி படைத்தவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு வரப் போவதில்லை. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி கேட்டால், வரியை உயர்த்துமாறு கூறுகின்றனர். இருப்பினும் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்