செந்தில்குமரன்: உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரை தமிழர்

பட மூலாதாரம், Senthil Kumaran
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நீங்கள் பார்க்கும் இந்தப் படம்தான் இந்த ஆண்டின் (2022) மிகச்சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை பெற்றுக் கொடுத்த தொகுப்பின் ஒரு படம். விருதைப் பெற்றுக் கொடுத்தது இந்தப் படம் என்றால், பெற்றுக் கொண்டவர், ஒரு மதுரைத் தமிழன். சொல்லப்போனால், இந்த விருதைப் பெறும் முதல் தென்னிந்தியரும் இவர்தான்.

பட மூலாதாரம், senthil kumaran
உலகின் 130 நாடுகளில் இருந்து சுமார் 4,066 புகைப்படக்கலைஞர்கள் அனுப்பிய 64,823 புகைப்படங்களுக்குள் இருந்து ஆசியப் பிராந்தியத்தின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞராக அறிவிக்கப்பட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். இவர் அனுப்பிய 'எல்லைகள்: புலி - மனிதன் மோதல்' என்ற தலைப்பிலான தொகுப்புக்காக இந்த விருதை பெற்றுள்ளார்.
23 நாடுகளைச் சேர்ந்த 24 வெற்றியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமரனின் பயணம் எப்படி இருந்தது?
பிபிசி தமிழுடன் செந்தில் குமரன் நடத்திய உரையாடலின் உரை வடிவம் இது.
எங்கிருந்து தொடங்கியது இந்த கேமராப் பயணம்?
எல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்துதான். ஆனால், கேமரா வழியாக அல்ல. கதைகள் வழியாக. எங்கள் ஆசிரியை தினந்தோறும் சொல்லும் கதைகள்தான் எனது கற்பனைத்திறனுக்கு காரணமாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் முதல் அடித்தளம் அதுதான்.
அதுபோக, மதுரை பழங்காநத்தம் தான் என் ஊர். உலகமயமாக்கலுக்கு முன்பான அழகான வாழ்க்கை எனக்கு வாய்த்தது. எழில் கொஞ்சும் ஊர். அதில் எப்போதும் குளங்கள், மீன்கள், பாம்புகள் விளையாட்டு, வெயில் என மகிழ்ச்சியான நாட்கள் அவை. அங்கிருந்துதான் தொடங்கியது இயற்கையைப் பார்க்கும் பார்வையும் அதன் மீதான கண்ணோட்டமும்.

பட மூலாதாரம், Senthil Kumaran
அந்தவகையில், நான் அதிகமாக ரசித்தவை சூரிய அஸ்தமனங்கள் தான். எப்போதும் சூரிய அஸ்தமனங்களைத் தவற விடுவதே இல்லை. எந்த ஊருக்குச் சென்றாலும் அந்தந்த ஊரிலிருந்து சூரிய அஸ்தமனங்களை கண்டு ரசிப்பேன். ஓவியங்கள் வரைந்தாலும் சூரிய அஸ்தமனம்தான் என் முதல் தேர்வு.
இந்தச் சூழலில், என் நண்பன் இல்லத்தில் ஒரு கருப்பு-வெள்ளை டிவி வாங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அது வெளியில் இருக்கும். அப்போது பிபிசியில் வெளியான ஆவணப்படம் ஒன்றை பார்க்க முடிந்தது. ஆங்லியா என்ற செய்தியாளர், ராண்டம்பூரில் புலிகள் குறித்து தயாரித்த ஆவணப்படம் அது. ஏற்கனவே உயிரினங்கள் மீதிருந்த என் ஆர்வத்தை புலிகளின் பக்கம் திருப்பிவிட்ட சம்பவம் அதுதான்.
என் கல்லூரி சமயங்களில் ஏராளமான புகைப்படங்களைப் பார்ப்பேன். ஆனால், இதுபோல ஒரு படத்தை நாம் எடுக்க வேண்டும் என்ற எண்னத்தை உருவாக்கியது ஒரு சூரிய அஸ்தமனத்தின் படம்தான்.
முதல் கேமரா
அப்போது, மதுரை தியாகராஜா கல்லூரியில் ஒரு ஓவியப்போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் வென்று பரிசாகக் கிடைத்த 1500 ரூபாயில் ஒரு பழைய மாடல் ஃபிலிம் ரோல் கேமரா ஒன்றை வாங்கினேன். நானும் ஏதேதோ முயற்சித்துப் பார்த்தேன். நான் ரசித்தது போன்ற சூரிய அஸ்தமனத்தை படமெடுக்கவே முடியவில்லை. ஆனால், இந்த சமயத்தில்தான் ஒளியைக் கையாளுவது குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒளியைப் புரிந்து கொண்டேன்.

பட மூலாதாரம், senthil kumaran
பின்னர் வட இந்தியாவின் குஸ்தி, திருநங்கைகளின் மிஸ் கூவாகம் விழா, புலிகள், யானைகள் என புகைப்பட வாழ்க்கை தொடர்ந்தது.
இப்படித்தான் புகைப்படக்கலை எனக்கு நெருக்கமானது. பின்னர், நண்பர்களுக்காக விளம்பரப்படங்களுக்கு படமெடுத்துக் கொடுத்தேன். மெல்ல மெல்ல ஒரு முழு விளம்பரத்தை படமெடுத்து எடிட் செய்து, பக்கம் வடிவமைத்து அறிக்கையாக, நோட்டீசாக, புத்தகமாக வடிவமைக்கும் அளவுக்கு என்னை வளர்த்துக்கொண்டேன். இதன்மூலம், தொழில்முறை படக்கலைஞனாக மாறினேன்.

பட மூலாதாரம், senthil kumaran
ஆனாலும், பயணங்கள் மீதான விருப்பமும், காட்சிப்படுத்தல் மீதான ஆர்வமும் தொழில்முறையாக அல்லாத கலை ரீதியிலான படங்களை எடுக்கத் தூண்டின. அந்த வகையில், 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் விருது என் படங்களுக்கு கிடைத்தது. புகைப்படங்களுக்காக நான் பெற்ற முதல் விருது இதுதான்.
இதுவரை 15க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள், 25க்கும் அதிகமான ஆவணத் தொகுப்புகள், 2005இல், குலசேகரப்பட்டினம் தொகுப்புக்கு யுனெஸ்கோ விருது, 2007இல், லண்டன் ராயல் சொசைட்டி மூலம் உலகின் சிறந்த புவியியல் புகைப்படக்கலைஞர் விருது என இவரது படைப்புகளும் பட்டங்களும் நீள்கிறது.
ஒரு முறை யானைகள் பற்றிய ஆய்வுக்காக முதுமலையில் இருந்தேன். அப்போது வால்பாறையில் ஊருக்குள் புலி ஒன்று புகுந்து விட்டதாகவும் அதை மயக்க ஊசி போட்டு பிடித்து செல்ல என்னையும் உடன் அழைத்தனர். பத்து வயதில் பார்த்த புலியை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் ஆர்வத்துடன் வால்பாறைக்கு சென்றேன்.
பெரும் கூட்டத்திற்கு நடுவே, ஒரு வீட்டின் பின்புறம் சேற்றில் உருண்டு புலிக்கான வரிகளே தெரியாமல் எலும்பும் தோலுமாய் பரிதாபகரமாக ஒரு புலி படுத்திருந்தது. கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட மக்கள் கையில் கட்டை கம்புகளுடன் கடும் கோபத்தில் புலியை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் கம்பீரமான புலியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெரும் ஏமாற்றத்துடன் முடிந்தது.

பட மூலாதாரம், Senthil Kumaran
புலியின் இருண்ட பக்கங்களையும் அதன் தற்கால வாழ்வியல் சூழலையும் நான் உணர அந்தக் காட்சிகளே காரணமாகின. அந்த உணர்வும் தேடலும்தான் எனக்கு புலிகள் மற்றும் மனித மோதல்கள் பற்றிய புகைப்படத் தொகுப்பை ஆரம்பிக்க தூண்டின. கடந்த 8 வருடங்களாக அதை ஆவணப்படுத்தி வருகிறேன். இந்தியாவின் மாநிலங்கள் தோறும் பயணித்தேன். ரயில், பஸ், ஜீப் என எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி என் சொந்தச் செலவில் பயணித்து எடுத்த படங்கள்தான் அதிகம் .
வேர்ல்டு ப்ரெஸ் போட்டோ விருது பற்றி?
வேர்ல்டு ப்ரெஸ் போட்டோ விருதைப் பொறுத்தவரை, நாங்கள் வெல்லமாட்டோம் என்று தெரிந்தும் இந்த விருதுக்கு படங்கள் அனுப்புவோம். ஏனெனில், தோற்றுவிட்டாலும் கூட, அந்தாண்டு போட்டிக்கு வந்த அனைத்துப் படங்களையும் கொண்ட தொகுப்பிதழ் ஒன்று நமக்கு கொரியர் செய்து வைக்கப்படும். அதற்காகவே அனுப்புவோம்.
ஆனால், அண்மைக்காலமாக இப்படி தொகுப்புகள் அனுப்புவதை அந்த அமைப்பு நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி விட்டது. எனவே நாங்களும் படங்கள் அனுப்புவதை நிறுத்திவிட்டோம்.
இதற்கிடையில், அண்மையில் இந்த புலிகள் படத்தொகுப்பை பார்த்த நண்பர் ஒருவர், இதை லாங்க் டெர்ம் பிரிவுக்கான போட்டிக்கு ( இந்த விருதுகளுக்கான 3 பிரிவுகளில் லாங் டெர்ம் என்ற பிரிவும் ஒன்று ) அனுப்பலாமே என்று சொன்னார். நானும் சரி அனுப்பிப் பார்ப்போமே என்றுதான் அனுப்பினேன்.

பட மூலாதாரம், senthil kumaran
வெற்றி பெறும் என்று நினைக்கவில்லையா?
இல்லை. காரணம், இந்த ஆண்டுக்கான போட்டியில் கோவிட், ஆப்கானிஸ்தான் என கடுமையான களங்கள் இருந்தன. அங்கிருந்துவரும் வலிமிக்க கதைகள்தான் வெல்லும் என்று ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருந்தேன். மனித - விலங்கு மோதல் இந்தப் போட்டியில் வெல்லுமா என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால், என் படத்தொகுப்பு வென்றது எனக்கு ஆச்சரியமான மகிழ்ச்சிதான்.
அடுத்தகட்ட திட்டமென்ன?
அடுத்தடுத்து விருதுகளுக்காகவோ, பொருளாதாரத்துக்காகவோ படமெடுக்க விரும்பவில்லை. என் படங்களின் மூலமாக இந்தச் சமுகத்துக்கு கடத்த நினைத்த செய்தியை எழுதுவது, எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகப் பேசுவது என களத்தில் இறங்குவதுதான் என் அடுத்த திட்டம்.
படங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா?
இல்லை. காட்டுயிர் பாதுகாப்பு என்பது வெறுமனே விலங்குகள் பக்கம் நின்று பேசுவது மட்டுமல்ல. இதனை காட்டுயிர்கள், பழங்குடிகள், வனத்துறை, அரசாங்கம் என்று 4 கோணங்களிலிருந்தும் அணுக வேண்டியது அவசியமாகிறது. இதற்கூடாக வெற்றியை எட்டுவதற்கு, நம் தனிமனித வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு களத்தில் இறங்கி எல்லோருக்குமான மொழியில் பணியாற்ற வேண்டும். எனவே களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.
அதுபோக, அடுத்த தலைமுறை மாணவர்களையும் இனிவரும் நாட்களில் உருவாக்க வேண்டும். அதற்காகவும் பணியாற்றுவேன்.
மொத்தத்தில், அங்கீகாரங்களைக் கடந்து ஆச்சரியம் மட்டுமே ஒரு புகைப்படக்கலைஞனை அடுத்தடுத்து இயக்கக்கூடியது. ஒன்றின் மீதான ஆச்சரியத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. அதுதான் புகைப்படக் கலைஞனுக்கான அடிப்படை ஆதாரம் என்கிறார் செந்தில் குமரன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்































