சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்

பள்ளி மாணவன் பலி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்னையில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இறந்த மாணவனின் தாய்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது எட்டு வயது மகன் தீக்‌ஷித் வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். தீக்ஷித் பள்ளிக்கு வேனில் சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

எப்படி விபத்து?

இன்று வழக்கம் போல வேனில் பள்ளிக்கு சென்ற தீக்ஷித்தை, வேனில் இருந்து மாணவர்களை இறக்கி விடும் பெண் பணியாளர் ஞானசக்தி இறக்கி விட்டிருக்கிறார். வேனில் இருந்து கீழே இறங்கி வகுப்பறைக்கு செல்லும்பொழுது வேனில் டிபன் பாக்ஸை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வந்துள்ளது, அதை எடுப்பதற்காக மீண்டும் வேனை நோக்கி தீட்சித் ஓடி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, வேன் ஓட்டுனர் பூங்காவனம் வேனை பின்னோக்கி இயக்கிக்கொண்டிருந்தார். அங்கே ஓடிவந்த தீக்ஷித் வேனின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தான். உடனே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவனை கொண்டு சென்றனர். மாணவனின் தாய் ஜெனிபரிடம் பள்ளி நிர்வாகம் போனில் தகவல் தெரிவித்தது. பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் தீக்‌ஷித் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவன் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் பலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வேனில் இருந்து மாணவர்களை இறக்கி விடும் பெண் பணியாளர் ஞானசக்தியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய மூன்றுபேர் மீதும் கொலை என சொல்ல முடியாத, மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் கோரிக்கை

இதைதொடர்ந்து மாணவன் தீக்‌ஷித் உடலை வாங்க மறுத்த மாணவனின் தாயார் ஜெனிபர், பள்ளித் தாளாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினார்.

"காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து தீக்ஷித்தை பள்ளி வேனில் பள்ளிக்கு அனுப்பினோம். சரியாக பத்து நிமிடம் கழித்து 8.40 மணிக்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் அப்போது தகவல் தெரிவித்தனர். மேற்கொண்டு விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த எனது குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் கறை இருந்தது. பள்ளி நிர்வாகத்திடம் இருந்து என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை தெளிவாக யாரும் கூறவில்லை. வேனில் லஞ்ச் பாக்ஸ் மறந்து வைத்து விட்டதாகவும் அதை எடுக்கச் செல்லும் பொழுது எனது குழந்தை மீது வேன் மோதியதாகவும் கூறுகிறார்கள்.

அதிகாரிகள் வாக்குறுதி

முதற்கட்டமாக வேன் ஓட்டுனரை கைது செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் பள்ளியின் தாளாளரை கைது செய்யும் வரை என் குழந்தையின் உடலை வாங்கப்போவதில்லை" என கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறினார் ஜெனிபர்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று பெற்றோர் மாணவன் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :