You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது
தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் பலர் மருத்துவம் பார்க்கவும், பிரிட்டன், கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களோடு சேர்ந்து வாழவும் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமானப் போக்குவரத்தை ரத்து செய்ததுடன் விமான நிலையங்களையும் மூடியது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இலங்கைக்கு அருகே இந்தியா இருப்பதால், இந்தியாவில் தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதி வழியாக கனடா தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் தேதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள், இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் கள்ளத்தோணியில் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர். அவர்கள் 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு போலீசார் இன்று 27 பேரையும் மதுரையில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 27 பேரும் கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே இலங்கையில் இருந்து கனடா செல்ல கள்ளத்தோணியில் மங்களூர் சென்ற 34 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் இங்கிலாந்து நாட்டவர் கைது
போதைப்பொருள் கடத்துவதற்காக தூத்துக்குடியில் சுற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட இங்கிலாந்து நாட்டவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இங்கிலாந்து நாட்டவரை தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், இங்கிலாந்து நாட்டின் லிட்டில்ஹேம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜொனதன் தோர்ன் (வயது 47) என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரில் இருந்து மதுரை வந்த இவர், பின் சாலை வழியாக தூத்துக்குடி வந்துள்ளார்.
தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. பிடிபட்ட ஜொனதன் மீது மும்பை காவல் நிலையத்தில் பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,படகு மூலம் இலங்கைக்கு சென்று போதைப்பொருட்களை வாங்குவதற்காக தூத்துக்குடி வந்திருந்ததும், இதற்காக வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவரின் உதவியை நாடுவதற்காக அவர் ஹோட்டலில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தனியார் ஹோட்டலில் ஜொனாதன் தங்கியிருந்த அறையிலிருந்து இரண்டு விலையுயர்ந்த செல்போன்கள், இந்திய பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், துபாய் நாட்டில் செல்லத்தக்க வகை திராம்கள், இலங்கை, நேபாளம், வங்காள தேச நாட்டு பணம், இரண்டு பிரிட்டன் கடவுச் சீட்டுகள், இந்திய கடவுச்சீட்டு ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இவர் இந்தியாவின் கோவா கடற்கரை வழியாக உலக நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜொனாதன் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் வெப்ப பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் ராஜகுமரேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
பிற செய்திகள்:
- ட்விட்டரில் களமாடும் ஒன்றிய உயிரினங்கள்: பாஜக கோபம் கொள்வது ஏன்?
- அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் நரம்பு நோய் – ஆய்வில் தகவல்
- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
- காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
- தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்