You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் ரெய்டு - பறிமுதலாகும் கோடிக்கணக்கான ரொக்கம் - இன்று என்ன நடந்தது?
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலின்போது வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் தருவதாக எழும் சர்ச்சை பரவலாக காணப்படுகிறது.
இதையொட்டி, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள், தினமும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திடீர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரொக்கத்தை பறிமுதல் செய்து வருகின்றன.
இதில் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கு முறையான கணக்கு மற்றும் அதை பொதுவெளியில் கொண்டு சென்றதற்கான காரணத்தை நியாயப்படுத்தும் ஆதாரங்களை காண்பித்தால் மட்டுமே அந்த பணத்தை அதிகாரிகள் விடுவிக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில் அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை நடத்தினர். உதயகுமாருக்குச் சொந்தமான தனியார் கல்லூரி இலுப்பூர் அருகே செயல்பட்டு வருகிறது. அதில், விராலிமலையைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் நள்ளிரவு வரை நடந்த சோதனையில் ரூ.50 லட்சம் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான கரூரில் உள்ள நிறுவனங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையோ பிற அரசுத்துறைகளோ இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் எம்எல்எவுமான ஆர். சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றியவரின் வீட்டில் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூபாய் ஒரு கோடி அளவிலான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக சந்திசேகர் போட்டியிடுகிறார். இவரது தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: