மத்திய பிரதேசத்தில் முதியவர்களை ஊருக்கு வெளியே விட முயன்ற அரசு ஊழியர்கள்: 'கடவுளிடம் மன்னிப்பு கேட்ட' இந்தூர் ஆட்சியர்

இறக்கிவிடப்பட்ட முதியவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வயதானவர்களை மாநகராட்சி ஊழியர்கள் நகருக்கு வெளியே விட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சீற்றத்தை உருவாக்கியது.

இந்நிலையில் இதுகுறித்து தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்டதாக இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

வீட்டற்றவர்களை மாநகருக்கு வெளியில் கடும் குளிரில் கைவிட்டுச் சென்ற உள்ளூர் நிர்வாகத்தின் நடவடிக்கைக்காக, தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையின் ஓரமாக டிரக் ஒன்றில் வயதானவர்களை ஏற்றி வந்த மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை தெருக்களில் விட்டுச் செல்வது அந்த பகுதி மக்களால் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும் மாநகராட்சி ஊழியர்களின் அந்த செய்கையை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள் கடும் குளிரில் வயதானவர்களை விட்டுச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை திரும்ப அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் அபே ராஜன்கோயன்கர், "நாங்கள் வீடில்லாதவர்களுக்கு தங்கம் வசதி செய்து கொடுத்துள்ளோம். இவர்கள் ஏன் அங்கு அனுப்பப்படவில்லை என்பது குறித்து விசாரிக்கப்படும். இது தொடர்பாக இரு ஒப்பந்த ஊழியர்களை நாங்கள் பணிநீக்கம் செய்துள்ளோம்." என்று தெரிவித்துள்ளார் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தூர் நகரம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தூய்மையான நகருக்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

புதுச்சேரியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வந்துள்ள, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், ஜெ.பி.நட்டா தலைமையில், 'மலரட்டும் தாமரை ஒளிரட்டும் புதுவை' என்ற பெயரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா "புதுச்சேரியில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்படுகின்றது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியை ஒரு லட்சத்திற்கு மேலானவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.130 கோடி மக்களையும் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோதி செயல்பட்டு வருகின்றர்," என்றார்.

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியால் புதுச்சேரி வளர்ச்சி 70 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஜார்க்கண்ட் மாநில கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் புதுச்சேரி மாநிலத்திற்கான கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் இழைத்துள்ளாதாக மீது குற்றச்சாட்டு வைத்தார்.

"வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 23க்கும் மேலான இடங்களைப் பெற்று பாஜக ஆட்சி அமைப்போம். அப்போது புதுச்சேரியில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. பாஜக ஆட்சிக்குப் பிறகு இந்தாண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்," எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: