லஞ்ச ஒழிப்பு சோதனை: தமிழக அதிகாரியின் வங்கி லாக்கரில் 50 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

பணம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து 50 லட்ச ரூபாய் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை ஒன்றை நடத்தியது.

அந்தச் சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு வங்கியின் கணக்குப் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவருடைய வங்கிக் கணக்கோடு தொடர்புடைய வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று திறந்து பார்த்தனர். அந்த லாக்கரில் 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக 50 லட்சத்து 500 ரூபாய் பணம் இருந்தது. அந்தப் பணம் முழுவதும் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :