ஹாத்ரஸ் பெண் உயிரிழப்புக்கு முன்பு கூட்டுப்பாலியலுக்கு ஆளானார் - சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பெண் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கூட்டுப்பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, அரசியல் மற்றும் உள்ளூர் அழுத்தம் காரணமாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பெண்ணின் மரணம் தொடர்பாக வெளிவந்த முரண்பட்ட தகவல்களால் அந்த சம்பவம் பற்றிய விசாரணையை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரபிரதேச அரசு கேட்டுக் கொண்டது.

முன்னதாக, உயிரிழந்த பெண்ணின் சடலத்தை டெல்லி மருத்துவமனையில் இருந்து எடுத்து வர நடவடிக்கை மேற்கொண்ட உத்தர பிரதேச காவல்துறையினர் அதை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், இதன் மூலம் தடயங்களை கலைக்க முயன்றதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் தொடர்புடையதாக நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளுடன் சேர்த்து பட்டியலித்தவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்கள், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்கார கிராமத்தில் வயல்வெளியில் புல் வெட்டச்சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

அந்த வகையில், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சாகும் தருவாயில் அந்த பெண் அளித்த மரண வாக்குமூலம் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சிபிஐ பதிவு செய்திருக்கிறது. இது தரவி, தடயவியல் மற்றும் அறிவியல்பூர்வ ஆதாரங்களும் வழக்குக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தில் தொடக்கத்தில் அந்த பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் கூறினார்கள். அதற்கு முரணாக தற்போதைய சிபிஐ குற்றப்பத்திரிகையில் அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டே கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :