வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஏர்கலப்பை பேரணியில் தள்ளுமுள்ளு

பிரசுரிக்கப்பட்டது

(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பை பேரணி கோவையில் இன்று துவங்கப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாநாடு முடிந்ததும் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை தடுக்க காவல்துறையினர் முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கருமத்தம்பட்டி - சோமனூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினரின் தடுப்பை மீறி காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பையை கையில் ஏந்தியபடி சாலையில் நடந்து சென்றனர்.

பிரதான சாலை சந்திப்பில் கே.எஸ்.அழகிரியும், கட்சியினரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு வேலையை கருணை அடிப்படையில் வேலை வாங்க தந்தையை கொன்ற மகன்

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், பர்காகனா என்கிற நகரில் உள்ள சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் பொதுத்துறை நிறுவனத்தில், தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் 55 வயதான கிருஷ்ணா ராம்.

இவரது மூத்த மகனுக்கு வயது 35. இவர் வேலைவாய்ப்பு இல்லாதவர். எனவே, தந்தையின் வேலையைப் பெற, ராமின் மூத்த மகன், தந்தையையே பர்காகனா குடியிருப்பில் வைத்து, புதன்கிழமை இரவு, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் கொலையை, நேற்று (21 நவம்பர் 2020) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறையினர் உறுதி செய்து இருக்கிறார்கள்.

ராமை கொலை செய்ய, அவரது மகன் பயன்படுத்திய ஒரு சிறிய ஹம்மர் கத்தியைக் காவல் துறையினர் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதோடு ராமின் செல்ஃபோனையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

ராமின் மகன், காவல் துறையினரின் விசாரணையின் போது, சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில், கருணை அடிப்படையில் ஒரு வேலையைப் பெற, தன் தந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் என்கிறது பிடிஐ செய்தி.

சென்ட்ரல் கோல்ட் ஃபீல்ட் நிறுவனத்தில், ஊழியர் ஒருவர், பணியில் இருக்கும் காலத்தில் இறந்தால், அந்த ஊழியரைச் சட்டபூர்வமாகச் சார்ந்து இருக்கும் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :