You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலூரில் வேல் யாத்திரை: "ஸ்டாலினின் கனவு, கனவாகவே போய்விடும்" - எல்.முருகன்
(இன்றைய நாளில் உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.)
கடலூர் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகை குஷ்பூ உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையானது தடையை மீறி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஐந்தாவது மாவட்டமாகக் கடலூரில் இன்று (நவம்பர் 18) வேல் யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலூர் நகரில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தனியார் உணவகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்ட வேல் யாத்திரை கூட்டத்தில் பேசிய எல்.முருகன், "வேல் யாத்திரை அவசியமானது அல்ல, அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தி இருக்கிறது. அந்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய கூட்டணியை சார்ந்தவர்களும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களிடையே காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை சென்று கொண்டிருக்கிறது," என்று கூறினார்.
மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு அவர்கள் சரியான பாடம் கற்பிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் வரும் ஐந்து, ஆறு மாதங்களில் நடக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் அவருடைய கனவு நிச்சயமாக நிறைவேறாது. உங்களுடைய கனவு கனவாகவே போய்விடும். தமிழர்கள் உங்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்," எனத் கூட்டத்தில் எல்.முருகன் தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அதிக அளவில் இருப்பார்கள். நாம் சுட்டிக்காட்டக் கூடியவர் தான் கோட்டையில் முதலமைச்சராக இருக்க முடியும் என்றும் முருகன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு வேல் யாத்திரையை பாஜக மாநில தலைவர் எல். முருகன் தொடங்க முற்பட்டபோது, காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவருடன் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு உட்பட 500க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
நடிகை குஷ்பு கார் விபத்து: "முருகன் புண்ணியத்தால் உயிர் பிழைத்தோம்"
பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த நடிகை குஷ்பு பயணம் செய்த கார் மீது கன்டெய்னர் லாரி உரசிச் சென்ற சம்பவத்தில் அவரும் அவருடன் பயணம் செய்தவர்களும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்துள்ள வேல் யாத்திரை என்ற நிகழ்ச்சியை அக்கட்சியினர் முக்கிய முருகன் கோயில்கள் அமைந்துள்ள வழிபாட்டுத்தல பகுதிகளில் நடத்த தீர்மானித்துள்ளனர். ஆனால், யாத்திரையாக அந்த பகுதிகளுக்கு தொடர்ந்து செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
இதனால் பாஜகவினர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முருகனின் வழிபாட்டுத் தல பகுதிகளில் கூடி அங்குள்ள முருகன் கோயிலில் வழிபட்டு, பொதுக்கூட்டம் நடத்தி விட்டு பிறகு மற்ற இடத்தில் மீண்டும் கூடுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, கடலூரில் வேல் யாத்திரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் நடிகை குஷ்பு காரில் பயணம் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அவரது கார் புதுச்சேரி செல்லும் சாலையில் சென்றபோது அதே வழியில் பின் பக்கமாக வந்த கன்டெய்னர் லாரி, குஷ்புவின் காரை இடது பக்கமாக வேகமாக உரசியதில் அவரது காரின் பின் பக்க கதவு, முன் பக்க கண்ணாடி பலத்த சேதம் அடைந்தது. இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்திலும் குஷ்பு குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் முருகன் புண்ணியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம். கன்டெய்னர் லாரி இடதுபக்கமாக எங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது உரசியதில் கார் விபத்துக்குள்ளானது. எங்களுடைய ஓட்டுநர் சாமார்த்தியமாக காரை இயக்கியதால் பிழைத்தோம்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கன்டெய்னர் லாரி ஓட்டுநரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இது திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேறு கார் மூலம் கடலூருக்கு குஷ்புவும் அவருடன் வந்த பாஜகவினரும் புறப்பட்டுச் சென்றனர்.
அமெரிக்க தேர்தல்: டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்
அமெரிக்க தேர்தலில் தபால் வாக்குகள் பதிவில் மோசடி நடந்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்த தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். இந்த நிலையில், தபால் வாக்குப்பதிவு தொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்கு மாறாக, தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் நம்பகத்தன்மை மிக்கவை என்று கிறிஸ் கிரெப்ஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கிறிஸ் கிரெப்ஸ் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு அதிபரின் கருத்துகளுடன் உடன்பட சில அதிகாரிகள் மறுத்தபோது, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை, டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தே அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
அதுபோலவே, கிறிஸ் கிரெப்ஸும் தனது பதவி நீக்க நடவடிக்கையை அதிபரின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தே தெரிந்து கொண்டார்.
அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது ரஷ்ய தலையீடு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து அத்தகைய தலையீட்டை தவிர்க்கும் நோக்குடன் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை நிறுவப்பட்டது. அதன் தலைமை பொறுப்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றிய சைபர் தொழில்நுட்ப நிபுணர் கிறிஸ் கிரெப்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது பதவி விலகல் செய்தி வெளிவந்தவுடன், தனது ட்விட்டர் பக்கத்தில் சேவை செய்ய கெளரவம் கிடைத்தது. எனது பணியை சரியாக செய்தேன். இன்றை எங்களின் நடவடிக்கை, நாளைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஜோ பைடனுடன் நரேந்திர மோதி தொலைபேசியில் பகிர்ந்த கவலைகள்
அமெரிக்காவின் அடுத்த அதிபராக தகுதி பெற்றுள்ள ஜோ பைடனை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், இரு தரப்பு கேந்திர கூட்டணி குறித்து பைடனுடன் தொலைபேசியில் பேசினேன். கோவிட்-19 பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், இந்திய, பசிஃபிக் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான முன்னுரிமைகள் மற்றும் கவலை குறித்து பகிர்ந்து கொண்டேன் என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறினார். ஆனால், அடுத்து வரவிருக்கும் அதிபர் ஜோ பைடன், பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளவராக அறியப்படுகிறார்.
அந்த வகையில், இந்தியாவுடனான நல்லுறவை பேணும் அதே சமயம், பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் தகுதி பெறுவதற்கான இடங்களில் முன்னிலை பெற்றதும், இந்திய பிரதமர் மோதி, இருவருக்கும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் அவருக்கு நெருக்கமான நண்பராக மோதி அடையாளப்படுத்தப்பட்டார். டிரம்பின் தேர்தல் பரப்புரையின் அங்கமாக அங்கமாக அந்நாட்டில் நடந்த நிகழ்ச்சியிலும் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோதி கலந்து கொண்டு, இந்திய வம்சாவளி அமெரிக்க வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், ஆட்சி மாற்றம் அமெரிக்காவில் உறுதியான நிலையில், ஜோ பைடனுக்கு மோதி தெரிவித்துள்ள வாழ்த்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
- லக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா?
- உ.பி பயங்கரம்: சூனியம் செய்ய 6 வயது சிறுமி கொலை - நுரையீரலை திருடிய கும்பல்
- கமலா ஹாரிஸ்: இனவெறி, பாலியல் ரீதியாக விமர்சிக்கும் 3 குழுக்கள் - என்ன செய்தது ஃபேஸ்புக்?
- உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: