சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சாத்தான்குளத்தில் கடந்த மாத இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஓரிரு தினங்களில் ஒப்படைக்க உள்ள நிலையில், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு ஏற்கனவே முன்வந்தது. எனினும், அவர்கள் விசாரணையைத் தொடங்கும் வரை சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என முன்னர் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார் என்றும் அதனைத் தொடர்ந்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதமாக எழுதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிபிஐ விசாரணைக்கு அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது என தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது - வழக்கின் பின்னணி

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல் துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களால் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலராக இருந்த முருகன் மற்றும் காவலராக இருந்த முத்துராஜ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: