கொரோனா வைரஸ்: இந்தியாவில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: இந்தியாவில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் கேட்டுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் தனித்திருப்பதும், சமூக விலகலுமே இத்தொற்று பரவாமல் இருக்க ஒரே தீர்வாக உள்ளது.
அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
இதுபோன்ற சூழலில், ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கை தளர்த்திவிட்டால் வைரஸ் அதிவேகமாக பரவும் என பரவலாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோதியிடம் பல்வேறு மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, இந்தியா போன்ற அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஊரடங்கு ஒன்றே சமூக விலகலை உறுதிப்படுத்தும் என்பதால் இதனை தளர்த்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் பிரதமரிடம் யோசனை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன்பேரில், இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதும், ஊரடங்கை நீட்டிக்கும் மன நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் நாட்டில் பகுதிவாரியாக ஊரடங்கை தளர்த்தலாமா அல்லது மாவட்டவாரியாக தளர்த்தலாமா என பிரதமர் கேள்வியெழுப்பியதாகவும் தெரிகிறது. இதிலிருந்து, ஊரடங்கை ஒரேயடியாக விலக்கிக் கொள்ள பிரதமர் தயாராக இல்லை என மத்திய அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர், என அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: இந்தியாவில் புலிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றா?
மேங்கு வங்க மாநிலத்தின் சுந்தரவனக் காடுகளில் உள்ள புலிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று (கோவிட்-19) ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணா்கள் தெரிவித்தனா் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அமெரிக்காவின் நியூயாா்க் பகுதியில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள 'நாடியா' என்ற பெண் புலிக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து உலகம் முழுவதும் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உயிரியல் பூங்கா நிா்வாகிகளும் விலங்குகள் நல ஆா்வலா்களும் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்தியப் புலிகள் பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரணவ் சன்சானி கூறுகையில், ''சுந்தரவனக் காடுகள் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள புலிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. சுந்தரவனக் காடுகளின் அமைவிடம் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.
எனினும், சரணாலயத்தில் உள்ள புலிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், வனவிலங்குகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று சரணாலய பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரணாலயத்துக்கு உள்ளே செல்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அங்கு நிலவும் சூழலை வன அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்'' என்றாா்.

தினத்தந்தி: "ஏறுமுகத்தில் பங்குச் சந்தை"
செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,476 புள்ளிகள் அதிகரித்தது. எனவே நேற்று ஒரே நாளில் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி உயர்ந்தது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
பங்குச்சந்தைகள் நேற்று கிடுகிடுவென ஏற்றம் கண்டன. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு வர்த்தகம் முடிந்தபோது ரூ.116 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய வர்த்தக தினத்தின் இறுதியில் அது ரூ.108 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடி உயர்ந்தது.

பட மூலாதாரம், AFP/ getty images
வர்த்தகம் ஏற்றம் கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையில் வங்கி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 10.70 சதவீதம் முன்னேறியது. அடுத்து எரிசக்தி துறை குறியீட்டு எண் 10.20 சதவீதம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் இண்டஸ் இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2,476.26 புள்ளிகள் அதிகரித்து 30,067.21 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 30,157.65 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 28,602.31 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 1,843 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 539 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 194 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,349 கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,187 கோடியாக இருந்தது.
நேற்று தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 708.40 புள்ளிகள் உயர்ந்து 8,792.20 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த் தகத்தின் இடையே அதிகபட்சமாக 8,819.40 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,360.95 புள்ளிகளுக்கும் சென்றது, என்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































